வயதான இந்தி நடிகை கீதா கபூரின் பரிதாப நிலை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு மகன் ஓட்டம்


வயதான இந்தி நடிகை கீதா கபூரின் பரிதாப நிலை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு மகன் ஓட்டம்
x
தினத்தந்தி 30 May 2017 10:47 PM GMT (Updated: 30 May 2017 10:46 PM GMT)

வயதான இந்தி நடிகை கீதா கபூரை அவரது மகனே அறைக்குள் அடைத்து பட்டினி போட்டு அடித்து சித்ரவதை செய்துள்ளார்.

மும்பை,

 பின்னர் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு சிகிச்சைக்கு பணம் கொடுக்காமல் ஓடி விட்டார். இந்த சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தி நடிகை

பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர். இவர் வெற்றிகரமாக ஓடிய ‘பகீஷா’ படத்தில் மீனாகுமாரியுடன் நடித்து பிரபலமானார். ‘ரஷ்யா சுல்தான்’ உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ராஜா என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். தற்போது வயதாகி விட்ட நிலையில் மும்பையில் உள்ள மகன் வீட்டில் வசித்து வந்தார்.

கீதா கபூருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. வெளியில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருவதாக கூறிச்சென்ற அவரது மகன் ராஜா மீண்டும் ஆஸ்பத்திரிக்கு வரவே இல்லை. அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார்.

கவலைக்கிடம்

ஆஸ்பத்திரி ஊழியர்கள் செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் பேசவில்லை. மகள் பூஜாவும் போனை எடுக்கவில்லை. கீதா கபூர் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் சிகிச்சை அளித்து குணப்படுத்தினார்கள். அவருக்கு மருத்துவ செலவு கட்டணமாக ரூ.1½ லட்சம் வந்து இருப்பதாகவும் அதை கட்டி விட்டு செல்லும்படியும் ரசீது கொடுத்தனர்.
கீதா கபூர் தன்னிடம் பணம் இல்லை என்று சொல்லி அழுதார். மகன் தன்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு ஓடி விட்டதாகவும் கூறினார். கீதா கபூரின் பரிதாப நிலை குறித்து தகவல் அறிந்ததும் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் அசோக் பண்டிட் தயாரிப்பாளர் ரமேஷ் தாரணி ஆகியோர் மருத்துவ செலவை ஏற்று ரூ.1½ லட்சத்தை ஆஸ்பத்திரியில் செலுத்தினார்கள்.

இது குறித்து கீதா கபூர் கூறியதாவது:-

பட்டினி போட்டனர்

“வயதான என்னை மகன் கவனிக்கவில்லை. தினமும் அடித்து உதைத்தான். பல நாட்கள் தனி அறையில் அடைத்து வைத்தான். 4 நாட்களுக்கு ஒரு தடவை சாப்பாடு போட்டனர். பட்டினி போட்டதால் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடும்படி வற்புறுத்தினான். நான் மறுத்து விட்டேன். இதனால் ஆஸ்பத்திரியில் கொண்டு போட்டு விட்டு ஓடிவிட்டான்”

இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
கீதா கபூர் குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story