குடிகார கணவரை திருத்த முடியாத ஆதங்கத்தில் மகன், மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


குடிகார கணவரை திருத்த முடியாத ஆதங்கத்தில் மகன், மகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 7 Jun 2017 11:00 PM GMT (Updated: 7 Jun 2017 9:12 PM GMT)

குடிகார கணவரை திருத்த முடியாத ஆதங் கத்தில் மகன்,மகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குமாரபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமாரபாளையம்,

குமாரபாளையம் சிவசக்தி நகரில் வசித்து வருபவர் முகமது யூசுப். இவருடைய மனைவி அபி(வயது 36). இருவரும் விசைத்தறி தொழிலாளர்கள். இவர்களுக்கு திருமணமாகி முகமது பேகம் (13) என்ற மகளும், முகமது அப்பாஸ் (11) என்ற மகனும் உள்ளனர். அந்த பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் முகமது பேகம் 7-ம் வகுப்பும், முகமது அப்பாஸ் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

முகமது யூசுப் சரிவர வேலைக்கு செல்லாமல் எந்த நேரமும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மது குடிப்பதற்காக பணம் கேட்டு அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்துவார் என்று கூறப்படுகிறது. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து உதைப்பாராம். இதையடுத்து அபி தனது கணவர் மீது குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால் இது தொடர்பாக போலீசார் விசாரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அபி, நேற்று மாலை 5 மணி அளவில் தனது மகன், மகளை அழைத்துக்கொண்டு சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை அருகே வந்தார்.

தற்கொலை முயற்சி

அப்போது அவர் கையில் வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெயை தனது மகன், மகள் மீது ஊற்றி விட்டு தனது தலையிலும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று அந்த பெண் மற்றும் 2 குழந்தைகளின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து வந்து அபி மற்றும் குழந்தைகளை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் அவருடைய கணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story