ரூ.30 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் 2 பயணிகள் கைது


ரூ.30 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் 2 பயணிகள் கைது
x
தினத்தந்தி 8 Jun 2017 8:55 PM GMT (Updated: 8 Jun 2017 8:55 PM GMT)

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.30 லட்சம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மங்களூரு,

துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.30 லட்சம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து வந்த விமானம்


தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பஜ்பேயில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு நேற்று காலை துபாயில் இருந்து ஏர்-இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்கவரித் துறை அதிகாரிகள் வழக்கம் போல் சோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த 2 பயணிகள் நடவடிக்கையில் சுங்கவரித் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், பிடிபட்டவர்கள் மங்களூருவை சேர்ந்த தீபக் இந்திரலால் கித்வானி, நிர்மல்தாஸ் லல்லானி ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் நூதன முறையில் தங்க கட்டிகளை துபாயில் இருந்து மங்களூருவுக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

ரூ.30 லட்சம் தங்க கட்டிகள்

அதாவது, 2 பேரும் தங்களது ஆசன வாயில் தங்க கட்டிகளை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 2 பேரிடம் இருந்தும் ஒரு கிலோ 247 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மொத்த மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று சுங்கவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதான 2 பேரையும் சுங்கவரித் துறை அதிகாரிகள், பஜ்பே போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story