பணம் வருவது நின்று விட்டால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக வாக்களிப்பர்


பணம் வருவது நின்று விட்டால் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக வாக்களிப்பர்
x
தினத்தந்தி 8 Jun 2017 11:00 PM GMT (Updated: 8 Jun 2017 9:20 PM GMT)

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் வருவது நின்று விட்டால் அவர்கள் கட்சிக்கு எதிராக வாக்களிப்பர், அப்போது ஆட்சி கவிழும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனியார் தங்கும் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கரும்பு விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கையான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,500 வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.

அவசர செலவுகளுக்கு விவசாயிகள் கால்நடைகளை விற்றுத்தான் சமாளித்து வருகின்றனர். இந்தநிலையில் இறைச்சிக்காக மாடுகளை விற்க, வாங்க விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தடையை திரும்ப பெறவில்லையெனில் ஒவ்வொரு கிராமத்திலும் போராட்டம் வெடிக்கும்.

சுக்குநூறாக உடையும்

தமிழக அரசு தற்போது 5 அணிகளாக உள்ளது. எப்போது சுக்குநூறாக உடையும் என தெரியவில்லை. விரைவில் அது நடக்கும். பணத்திற்காக பிரிந்திருக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பணம் வருவது நின்று விட்டால் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் நிலை வரும். அப்போது கண்டிப்பாக அ.தி.மு.க. அரசு கவிழும். தேர்தல் வரும் சூழல் இருக்கிறது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சியினரிடமும் தலைவர் சோனியா காந்தி பேசி வருகிறார். தகுதியுடைய நபரை எதிர்க்கட்சி சார்பில் சோனியா காந்தி அறிவிப்பார்.

ஜி.எஸ்.டி மசோதா அறைவேக்காடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவால் பொதுமக்கள், உணவகங்கள், பேருந்து தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் பிரதமர் மோடி உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருக்கிறார். சீதாராம் யெச்சூரி மீதான தாக்குதல் மிருகத்தனமானது. கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

மகளிர் காங்கிரஸ் தகராறு

தற்போது டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு பெருகுகிறது என கூற முடியாது. விரைவில் தினகரன் நிரந்தரமாக சிறைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படும். மாட்டிறைச்சி தொடர்பான மத்திய அரசு ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக படித்து வருகிறார். ஆங்கிலத்தில் இருப்பதால் ஒரு வேளை ஆங்கிலம் கற்று விட்டு பிடிப்பார் என நினைக்கிறேன். காங்கிரஸ் தமிழகத்தில் 3-வது பெரிய கட்சியாக இருக்கிறது. இன்னும் வளர்வதற்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். மகளிர் காங்கிரஸ் என்றாலே தகராறுதான். முழு விபரம் தெரிந்து கொண்டு சொல்கிறேன். தவறாக கூறினால் மகளிர் என் மீது பாய்வதற்கும் வாய்ப்பு உண்டு.

தமிழகத்தில் காங்கிரசின் செயல்பாடுகளால் தொண்டர்களின் உற்சாகம் குறையாமல் உள்ளது. சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story