கட்டிட பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்திருவண்ணாமலை மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில கட்டிட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு முன்னாள் தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். மண்டல முன்னாள் தலைவர் ஸ்ரீதர், முன்னாள் மாவட்ட தலைவர்கள் சிவக்குமார், சுரேஷ், பொருளாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கோவிந்தன் வரவேற்றார்.
மணல் விலை ஏற்றம்ஆர்ப்பாட்டத்தில் மணல் விலை ஏற்றத்தை கண்டித்தும், பத்திரப்பதிவை தமிழக அரசு ஒழுங்குமுறைப்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் வேண்டுமென்றும், பதிவு கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திட வேண்டும், கட்டிட தொழிலை பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் கட்டிட பொறியாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட கட்டிட பொறியாளர் சங்க செயலாளர் அன்பரசு நன்றி கூறினார்.