செங்குன்றம் அருகே லாரி மீது டிப்பர் லாரி மோதல்; 2 பேர் பலி


செங்குன்றம் அருகே லாரி மீது டிப்பர் லாரி மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 22 Jun 2017 9:00 PM GMT (Updated: 22 Jun 2017 6:40 PM GMT)

செங்குன்றம் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது டிப்பர் லாரி மோதியது. இதில் டிப்பர் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

செங்குன்றம்,

செங்குன்றம் அருகே சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது டிப்பர் லாரி மோதியது. இதில் டிப்பர் லாரி டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சாலையோரம் லாரி நிறுத்தம்

சென்னை துறைமுகத்தில் இருந்து கோதுமை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றது. அந்த லாரியை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த டிரைவர் ஆதுராம்(வயது 52) என்பவர் ஓட்டிச்சென்றார்.

சென்னை–கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் செங்குன்றம் அடுத்த எம்.ஏ.நகர் மார்க்கெட் அருகே சென்ற போது, திடீரென லாரி பழுதானது. இதனால் லாரியை டிரைவர் ஆதுராம், சாலையோரமாக நிறுத்தினார்.

2 பேர் பலி

இந்தநிலையில் இரவு 1.30 மணியளவில் சென்னையில் இருந்து செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரை நோக்கி வேகமாக வந்த டிப்பர் லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் டிப்பர் லாரி பலத்த சேதம் அடைந்தது.

இதில் படுகாயம் அடைந்த டிப்பர் லாரி டிரைவரான செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ. நகர், வீரமா முனிவர் தெருவைச் சேர்ந்த முருகேசன்(37) மற்றும் அவருடன் அமர்ந்து பயணம் செய்த மீஞ்சூரை சேர்ந்த லோடுமேன் அமாவாசை (52) ஆகிய 2 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து, சாலையோரம் பழுதாகி நின்ற லாரி டிரைவர் ஆதுராமை கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story