தார்வார் டவுனில் துணிகரம் தொழில் அதிபர் வீட்டில் ரூ.12½ லட்சம் தங்க நகை–பணம் திருட்டு


தார்வார் டவுனில் துணிகரம் தொழில் அதிபர் வீட்டில் ரூ.12½ லட்சம் தங்க நகை–பணம் திருட்டு
x
தினத்தந்தி 3 July 2017 4:15 AM IST (Updated: 3 July 2017 4:06 AM IST)
t-max-icont-min-icon

தார்வார் டவுனில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.12½ லட்சம் தங்க நகை–பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

உப்பள்ளி,

தார்வார் டவுன் தானு நகரை சேர்ந்தவர் சந்தோஷ். தொழில் அதிபர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சந்தோஷ் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார். வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

ரூ.12½ லட்சம் நகை–பணம் திருட்டு

மேலும் வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த தங்க நகைகள், பணம் மாயமாகி இருந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும், ரூ.50 ஆயிரத்தையும் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தார்வார் வித்யாகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து போலீசார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து வித்யாகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story