ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 85–வது நாளாக போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந் தேதி 2–ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர்.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12–ந் தேதி 2–ம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 85–வது நாளாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து போராடி வரும் மக்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து, மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர் படத்தை பிடித்தபடி நின்ற நபரிடம், திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் முறையிடுவது போல நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.






