குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 July 2017 4:15 AM IST (Updated: 11 July 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளியணை,

தான்தோன்றி ஒன்றியம் ஜெகதாபி ஊராட்சி மோள கவுண்டனூரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக ஊராட்சி சார்பில் அந்தப்பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு அதிலிருந்து தண்ணீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சின்டெக்ஸ் தொட்டி ஆகியவற்றை நிரப்பி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது நிலவும் கடும் வறட்சியினால் ஆழ்குழாய் கிணறுகள் வற்றி கடந்த 4 மாதங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் அந்தப்பகுதி மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அதை தொடர்ந்து கடந்த மாதம் புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது.


ஆனால் இதுவரை அதில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் ஜெகதாபிக்கு வந்து அங்கு கரூர்- மணப்பாறை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெகதாபி கிராம நிர்வாக அலுவலர் பிரபு, வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஜெகதாபியில் சுமார் அரை மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story