‘ஆன்லைன்’ மூலம் நடைபெறும் மணல் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க கட்டாய வாகன எண் பதிவு முகாம்


‘ஆன்லைன்’ மூலம் நடைபெறும் மணல் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க கட்டாய வாகன எண் பதிவு முகாம்
x
தினத்தந்தி 7 Aug 2017 11:00 PM GMT (Updated: 7 Aug 2017 9:05 PM GMT)

‘ஆன்லைன்’ மூலம் நடைபெறும் மணல் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க கட்டாய வாகன எண் பதிவு முகாம் திருச்சியில் தொடங்கப்பட்டு உள்ளது.

திருச்சி,

காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளை தமிழக அரசே நடத்தி வருகிறது. இங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்களது நேரடி மேற்பார்வையின் மூலம் மணல் விற்பனை செய்து வருகிறார்கள். கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் மணல் குவாரிகளில் ஆன்லைன் மூலம் மட்டுமே மணல் விற்பனை நடைபெற்று வருகிறது.

ஆன்லைன் மூலம் நடைபெறும் மணல் விற்பனையில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக கட்டாய வாகன எண் பதிவு செய்யும் முகாம் திருச்சி - புதுக்கோட்டை மெயின்ரோட்டில் சுப்பிரமணிய புரத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த முகாமை திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆன்லைன் மூலம் மணல் விற்பனையில் இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணில் போலியாக முன்பதிவு செய்து மணல் எடுக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன. இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்காக மணல் விற்பனையில் ஈடுபட்டு உள்ள லாரிகளின் எண்களை கட்டாயமாக பதிவு செய்து கொள்வதற்கான முகாம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த முகாமானது வருகிற வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து செயல்படும். இந்த முகாமில் லாரிகளை பதிவு செய்யாதவர்கள் மணல் குவாரியில் மணல் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த பதிவு முறை மூலம் போலியாக வாகன எண் பதிவு செய்து ஏமாற்ற முடியாது.

இது போன்ற முறைகேடுகளை தவிர்ப்பதன் மூலம் இனி மணல் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் தற்போது 12 மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. மணல் தேவை அதிகமாக இருப்பதால் வாய்ப்பு உள்ள இடங்களில் கூடுதல் மணல் குவாரிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் போலியாக எண்ணை பதிவு செய்த 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. திருச்சி முகாமில் பதிவு செய்து விட்டு வேறு மாவட்டங்களிலும் மணல் எடுத்துக்கொள்ளும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது உடன் இருந்த தமிழக அரசின் மணல் விற்பனை திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ் கூறுகையில் ‘தற்போது தினமும் சுமார் 11 ஆயிரம் லோடு மணல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது’ என்றார். 

Next Story