வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது


வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2017 10:15 PM GMT (Updated: 7 Aug 2017 9:07 PM GMT)

மார்த்தாண்டம் பகுதி வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குழித்துறை,

மார்த்தாண்டம், மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது60). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிணற்றில் பொருத்துவதற்காக மின்மோட்டார் வாங்கி வைத்திருந்தார். இதை மர்ம நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து சுபாஷ் சந்திரபோஸ் மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் மேரி. இவர் சந்தையில் கீரை வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு சந்தைக்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகை, கியாஸ் சிலிண்டர் மற்றும் சில பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். மாலையில் வீடு திரும்பிய மேரி வீட்டில் நகை, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதுபோல், செல்லத்துரை என்பவர் வீட்டில் இருந்து 150 ரப்பர் ஷீட் திருட்டு போனதாகவும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்தநிலையில், மார்த்தாண்டம் போலீசார் கழுவன்திட்டை, மருதங்கோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மருதங்கோடு பகுதியை சேர்ந்த ரகு (25), விஜயகுமார் (27) என்பதும், மேற்கண்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

தொடர்பா?

மேலும், இவர்களுக்கு வேறு ஏதாவது திருட்டு சம்பவங்களில் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story