குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையின்போது இளம்பெண் திடீர் சாவு


குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையின்போது இளம்பெண் திடீர் சாவு
x
தினத்தந்தி 8 Aug 2017 11:15 PM GMT (Updated: 8 Aug 2017 9:48 PM GMT)

குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையின்போது இளம்பெண் திடீரென இறந்தார். அவருடைய சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னகுடிபாலா பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவருடைய மனைவி ஜெயசுதா (வயது 25). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பிரவீன் என்ற 3 வயது ஆண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான ஜெயசுதாவிற்கு கடந்த மே மாதம் 2-வது ஆண்குழந்தை பிறந்தது.

அதன்பின்னர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு இளம்பெண் ஜெயசுதாவை சுகாதார செவிலியர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று சூளகிரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்துகொள்வதற்காக ஜெயசுதா சென்றார். அவருக்கு அங்கு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மயங்கிய ஜெயசுதா சுயநினைவை இழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் அவரை ஆம்புலன்சு மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜெயசுதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த ஜெயசுதாவின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் கதறி அழுதனர். பின்னர் ஆஸ்பத்திரி வளாகம் முன்பு தர்மபுரி - சேலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஜெயசுதாவின் 2-வது ஆண்குழந்தையையும் சாலையில் படுக்க வைத்து மறியலில் ஈடுபட்டனர். ஜெயசுதாவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினார்கள்.

சாலைமறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து தடைபட்டது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். இதுதொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Tags :
Next Story