ஆவடியில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி


ஆவடியில் கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 22 Aug 2017 10:30 PM GMT (Updated: 22 Aug 2017 5:09 PM GMT)

ஆவடியில், கார் மீது மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆவடி,

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது சலீம். பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் தமீம் அன்சாரி(வயது 21). ஆவடி அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். ஆவடியில் உள்ள அஜய் ஸ்டேடியம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி திடீரென சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது.

தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து ஓடிய மோட்டார் சைக்கிள் எதிரே வந்து கொண்டிருந்த ஒரு காரின் மீதும் மோதியது. இதனால் தமீம் அன்சாரி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் இரவு அங்கு சிகிச்சை பலனின்றி தமீம் அன்சாரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story