மும்பை தீயணைப்பு துறைக்கு அதிநவீன தீயணைப்பு வாகனங்கள் உத்தவ்தாக்கரே தொடங்கி வைத்தார்


மும்பை தீயணைப்பு துறைக்கு அதிநவீன தீயணைப்பு வாகனங்கள் உத்தவ்தாக்கரே தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:30 PM GMT (Updated: 22 Aug 2017 9:38 PM GMT)

மும்பை தீயணைப்பு துறைக்கு அதிநவீன தீயணைப்பு வாகனங்களின் பயன்பாட்டை உத்தவ்தாக்கரே தொடங்கி வைத்தார்.

மும்பை,

மும்பை தீயணைப்பு துறைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய தீயணைப்பு வாகனங்கள், தீயணைப்பு உபகரணங்கள் பயன்பாட்டை தொடங்கி வைக்கும் விழா நேற்று வடலாவில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் நடந்தது. விழாவில் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே தலைமை தாங்கினார். மேலும் மேயர் விஸ்வனாத் மகாதேஷ்வர், கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே புதிய வாகனங்கள் பயன்பாட்டை பூஜைபோட்டு தொடங்கி வைத்தார். இதேபோல அங்கு கட்டப்பட்டு இருந்த புதிய அலுவலக கட்டிங்களை உத்தவ்தாக்கரேயும், கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

மும்பை தீயணைப்பு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ரக வாகனங்கள் வெளிநாட்டு தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் என்ஜின்கள் 129 குதிரை திறன் கொண்டவை ஆகும். மேலும் இதில் ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இதேபோல சிறியரக தீயணைப்பு வாகனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன்மூலம் குறுகிய சாலைகளை கொண்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட முடியும். ‘புதிய தீயணைப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்’ என தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறினார்.


Next Story