தோட்டங்களில் ‘திடீர்’ தீ விபத்து 30 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசம்


தோட்டங்களில் ‘திடீர்’ தீ விபத்து 30 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 22 Aug 2017 11:15 PM GMT (Updated: 22 Aug 2017 10:01 PM GMT)

பழையகாயல் அருகே தோட்டங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத் தில் 30 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசம் அடைந்தன. தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தீ பரவியதால், சுமார் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் இருந்து அகரம், முக்காணி வரையிலும் ஏராளமான தோட்டங்களில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், பெரும்பாலான வாழைகள் குழை தள்ளிய நிலையிலும், தண்ணீரின்றி கருகிய நிலையில் உள்ளன. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் அகரம் ஊரின் வடபுறத்தில் உள்ள வாழை தோட்டங்களில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. காய்ந்த வாழை இலைகளில் தீப்பிடித்து நாலாபுறமும் மள, மளவென்று தீ பரவியது. மதியம் 2 மணி அளவில் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் அகரம் விலக்கு வரையிலும் தீ பரவியது.

தொடர்ந்து அங்கிருந்து பழையகாயல் இசக்கி அம்மன் கோவில் வழியாக மஞ்சள்நீர்காயல் விலக்கு வரையிலும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தீ வேகமாக பரவியது. அங்குள்ள தென்னை மரங்கள், பனை மரங்கள், சீமை கருவேல மரங்களிலும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

சுமார் 60 அடி உயரமுள்ள பனை மரங்களின் உச்சியிலும் தீப்பிடித்து எரிந்தது. எரிந்த பனை ஓலைகள் தீப்பிழம்புகளுடன் சாலையில் விழுந்ததால், தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற வாகனங்கள் புதுக்கோட்டை, சாயர்புரம், ஏரல் வழியாக திருப்பி விடப்பட்டன. இந்த தீ விபத்து குறித்து அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அந்த வழியாக வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் தீ விபத்தை பார்வையிட்டார். தொடர்ந்து தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம், பழையகாயல் சிர்கோனியம் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. அங்கிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். தீ விபத்தால் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் சுமார் 3½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து வந்து தீயணைப்பு வாகனங்களில் நிரப்பி தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். தன்னார்வலர்களும் மினி டேங்கர் லாரிகளில் தண்ணீரை எடுத்து வந்து தீயணைப்பு வாகனங்களுக்கு வழங்கினர். தீயணைப்பு வீரர் கள் சுமார் 3½ மணி நேரம் போராடி மாலை 5.30 மணி அளவில் முழுவதுமாக தீயை அணைத்தனர். ஆனாலும் தோட்டங்களில் இருந்து கரும்புகை வெளியேறியவாறு இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள வீடுகளில் வசித்தவர்கள் தங்களது வீடுகளின் மீதும் தண்ணீரை ஊற்றினர். இந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட தோட்டங்களில் சுமார் 30 ஆயிரம் வாழைகள் எரிந்து நாசம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். தீ விபத்தால் பழையகாயல் பள்ளிக்கூடத்தில் பயிலும் அகரம், மஞ்சள்நீர்காயல் பகுதி மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். தீ முழுவதும் அணைக் கப்பட்ட பின்னர் மாணவர்களை வாகனங் களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஏரல் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Related Tags :
Next Story