குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Sep 2017 11:00 PM GMT (Updated: 5 Sep 2017 7:12 PM GMT)

விருத்தாசலம் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்ணாடம்,

விருத்தாசலம் அருகே உள்ளது இருசாளகுப்பம் கிராமம். இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஏற்றி குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அப்பகுதியில் நிலவும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களாக கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை இருசாளகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் விருத்தாசலம் – ஆலடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்கள் பகுதிக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கும், விளைநிலங்களுக்கும் சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலை உள்ளது. எனவே எங்கள் பகுதிக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பின்னர் போலீசார், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஓரிரு நாட்களில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..


Next Story