மதுரை உயர்நீதிமன்ற கிளையால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினர் காவிரி ஆற்று பகுதியில் ஆய்வு


மதுரை உயர்நீதிமன்ற கிளையால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவினர் காவிரி ஆற்று பகுதியில் ஆய்வு
x
தினத்தந்தி 5 Sep 2017 10:45 PM GMT (Updated: 5 Sep 2017 9:46 PM GMT)

மதுரை உயர்நீதின்ற கிளையால் அமைக்கப்பட்ட விசாரணைகுழுவினர் காவிரி ஆற்று பகுதியில் ஆய்வு செய்தனர்.

முசிறி,

முசிறியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுடலைமுத்து என்பவர், முசிறி வக்கீல் திருமலைராஜா மூலம் கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள காவிரி ஆற்றில் அதிக அளவில் மணல் அள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், காவிரி ஆற்றில் 10 வருடங்களுக்கு மணல் அள்ளுவதற்கு அரசுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

அதே போல் முசிறி சந்தப்பாளையத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதால் குடிநீர் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்படுவதாகவும், முசிறி- குளித்தலை காவிரி ஆற்று பெரியார் பாலம் அருகே மணல் குவாரி அமைத்து மணல் அள்ளுவதால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். சீனிவாசன் தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில் காவிரி ஆற்று பகுதிகளில் கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள அரசு மணல் குவாரிகளை வருகிற 12-ந் தேதி வரை மூடுமாறும், மணல் அள்ளுவதற்கு தடை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மணல் அள்ளப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு உண்மை நிலை அறிந்து அறிக்கை சமர்பிக்க மதுரை உயர் நீதிமன்றம் விசாரணைக்குழு அமைத்திருந்தது. அதன் பேரில் நேற்று வக்கீல்கள் அழகுமணி, சரவணன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக பேராசிரியர் ரவிச்சந்திரன், கனிமவள மாநில அளவிலான திட்ட இயக்குனர் அருண்தம்புராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தொட்டியம், உன்னியூர், சீலைப்பிள்ளையார்புதூர், மணமேடு, திருஈங்கோய்மலை, சந்தப்பாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் அள்ளப்பட்டிருந்த மணல் அளவுகள், அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்ட பகுதிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது பொதுப்பணித்துறை பொறியாளர் ஜெயராஜ், முசிறி தாசில்தார் மணிகண்டன், வக்கீல் திருமலைராஜன், சமூக ஆர்வலர்கள் முருகேசன், சுப்ரமணியன், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுப்பணித்துறை பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். மேலும் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள், காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவதால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவது பற்றியும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் இன்றி சிரமப்படுவது பற்றியும் அவர்களிடம் விளக்கி கூறினார்கள். 

Next Story