பெங்களூருவில் வீடு புகுந்து பயங்கரம் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை


பெங்களூருவில் வீடு புகுந்து பயங்கரம் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 5 Sep 2017 11:45 PM GMT (Updated: 5 Sep 2017 10:12 PM GMT)

பெங்களூருவில், நேற்று இரவு வீடு புகுந்து பெண் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில், தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ் (வயது 55). இவர் ‘லங்கேஷ் பத்திரிகே‘ எனும் வாரப் பத்திரிகை நடத்தி வந்ததுடன் அதன் ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தார். முற்போக்கு சிந்தனையாளரான இவர், சமூக அநீதி, எழுத்தாளர்கள் மீதான தாக்குதல், படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து எழுதி வந்தார். எழுத்தாளராகவும் இருந்து வந்தார்.

சமீபத்தில் பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக கவுரி லங்கேசுக்கு எதிராக பா.ஜனதா எம்.பி. பிரகலாத் ஜோஷி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இருப்பினும், கவுரி லங்கேஷ் தனது விமர்சனங்களை தொடர்ந்து எழுதி வந்தார்.

இந்த நிலையில், காரில் வெளியே சென்றுவிட்டு நேற்று இரவு சுமார் 8 மணியளவில் கவுரி லங்கேஷ் தனது வீட்டுக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய அவர் தனது வீட்டின் உள்ளே செல்வதற்காக வாசல் நோக்கி சென்றார். அப்போது, அங்கு வந்த 3 மர்மநபர்கள் திடீரென்று துப்பாக்கியால் கவுரி லங்கேசை நோக்கி சரமாரியாக சுட்டனர். அவர்கள் 7 முறை சுட்டதில், 3 குண்டுகள் அவருடைய உடலில் பாய்ந்தன. இதையடுத்து, மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த துப்பாக்கியால் சுடப்பட்ட கவுரி லங்கேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்தவுடன் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார், மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர், அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி குறித்து ராஜராஜேஸ்வரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து உள்ளனர். இந்த தனிப்படை போலீசார், மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

இந்த கொலை குறித்து பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் கூறுகையில், “கவுரி லங்கேஷ் அவருடைய வீட்டு முன்பகுதி வராண்டாவில் குண்டு காயத்துடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க தனிப் படைகள் அமைக்கப் பட்டு உள்ளன. விரைவில் கொலையாளிகளை கைது செய்வோம்” என்றார்.

கவுரி லங்கேசின் சகோதரர் இந்திரஜித் கூறுகையில், “கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும்” என்றார். இந்த நிலையில், வீடு புகுந்து பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி கர்நாடக மாநிலம் தார்வாரில் எழுத்தாளர் எம்.எம்.கலபுரகியை மர்மநபர்கள் 2 பேர் வீடு புகுந்து சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆனபோதிலும் கொலையாளிகள் குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story