கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வின் மூலமே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும்


கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வின் மூலமே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியும்
x
தினத்தந்தி 6 Sep 2017 11:00 PM GMT (Updated: 6 Sep 2017 7:16 PM GMT)

கோவை மாவட்டத்தில் விழிப்புணர்வின் மூலமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் என்று ஆயவுக் கூட்டத்தில் கலெக்டர் ஹரிகரன் கூறினார்.

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–

நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே டெங்கு காய்ச்சல் ஏற்படுவதை தடுக்கலாம். அனைத்து துறை அரசு வளாகங்களையும் தூய்மைப்படுத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தங்களது ஊராட்சிகளுக்குட்பட்டுள்ள அரசு அலுவலகங்கள் அனைத்தும் தூய்மையாக உள்ளது என்று உறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும் காய்ச்சலை தடுப்பூசி மூலமாகவோ, தடுப்பு மருந்துகளால் மூலமாகவோ தடுக்க இயலாது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமாகவே காய்ச்சலை தடுக்க முடியும். எனவே மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களும் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்கூட்டியே ஒருவாரத்துக்கான முன்பயண திட்டங்களை தயாரித்து அதன்படி செயல்படவேண்டும்.

டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியில் அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து செயலாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களும் அவர்களது பணியினை உணர்ந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், சுகாதாரத்துறை விரைவான குழுக்கள் அமைக்கப்பட்டு வட்டார அளவில் கண்காணிக்கப்பட வேண்டும். அக்குழுவானது ஒரு நாளைக்கு இரண்டு முறை காலை மற்றும் மாலை தலைமை அலுவலர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், வணிகவரித்துறை இணை ஆணையர்கள் ரஷ்மி சித்தார்த் ஜெகடே, அம்ரித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story