அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாய உத்தரவு எதிரொலி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அலைமோதும் வாகன ஓட்டிகள்


அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாய உத்தரவு எதிரொலி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அலைமோதும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 6 Sep 2017 11:30 PM GMT (Updated: 6 Sep 2017 7:24 PM GMT)

வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை கட்டாயம் வைத்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து

பூந்தமல்லி,

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை சமாளிக்க கூடுதல் கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டு உள்ளன.

வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது அவர்களது அசல் உரிமத்தை வைத்து இருக்க வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு நேற்று முதல் அமல் படுத்தி உள்ளது. இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாகன ஓட்டிகள் பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கவும், புதிய ஓட்டுனர் உரிமம் பெறவும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வாகன ஓட்டிகள் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்து ஓட்டுனர் உரிமம் எடுக்க குவிந்துள்ளனர்.

வழக்கத்தை விட கூட்டம் அதிகமானதால் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தவர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு, உரிமம் தொடர்பாக சேவைகள் அளிக்கப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள் அதிகநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாகன ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காமலும், உரிமத்தை தவற விட்டவர்களும், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களும் அதிகஅளவில் வாகனங்களை ஓட்டி வந்து உள்ளனர். அவர்களுக்கு தமிழக அரசின் இந்த உத்தரவு அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் அனைவரும் உரிமம் பெறுவதற்காக வட்டார அலுவலகங்களை முற்றுகையிட்டுள்ளனர். இதனால் வழக்கத்தை விட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் திரண்டு உள்ளது.

இதில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறவர்கள் மூலம் உரிமம் பெறுவதற்காக பெரும்பாலோனோர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை நகரில் உள்ள பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர், ஆலந்தூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர்.

இதனால் கூட்டத்தை சமாளிக்க வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கூடுதலாக சில கவுண்ட்டர்களை திறந்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதுகுறித்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ. நெடுமாறன் கூறுகையில் : அசல் ஓட்டுனர் உரிமத்தை வாகன ஓட்டிகள் வைத்து இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்ததையடுத்து பூந்தமல்லி ஆர்.டி.ஓ எல்லைக்குஉட்பட்ட பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அதிக அளவில் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு வருகின்றனர். அவர்களின் தேவையை அறிந்து கூடுதலாக 3 கவுண்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி இதற்கு முன்பு எல்லாம் காலை தொடங்கி மதியம் 12 வரை மட்டுமே ஓட்டுனர் உரிமம் எடுக்க ஆன்லைனில் பதிவு செய்யப்படும். தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வருவதால் காலை தொடங்கி மாலை வரை புதிய ஓட்டுனர் உரிமம், புதுப்பித்தல் உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அசல் ஓட்டுனர் உரிமம் தொலைத்தவர்கள் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் சான்று ஏதும் பெறத்தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து அந்த சான்றை கொண்டு வந்து கொடுத்து தொலைந்த ஓட்டுனர் உரிமத்திற்கு பதிலாக புதிய ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ள முடியும்‘ என்று தெரிவித்தார்.

குன்றத்தூர் ஆர்.டி.ஓ. சுந்தரேசன் கூறுகையில் : அரசு அறிவிப்பை தொடர்ந்து அதிக அளவில் பெண்களும், வாலிபர்களும் ஓட்டுனர் உரிமம் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை முதல் மாலை வரை ஓட்டுனர் உரிமம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். முன்பெல்லாம் தினமும் குறைந்த அளவு மக்களே ஓட்டுனர் உரிமம் எடுக்க வருவார்கள் ஆனால் தற்போது அதிக அளவில் வருகின்றனர். அவர்களுக்கு உரிய தேவைகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக கொளத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று காலை முதலே கூட்டம் அலைமோதியது. சுமார் 200–க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரி சம்பத்குமார் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் அலுவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்‘ பெரும்பாலானோர் ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்காதவர்களும் தான் அதிகளவில் வாகனங்களை ஓட்டி வந்து உள்ளனர். தமிழக அரசின் இந்த உத்தரவினால் அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெற ஆர்வம் காட்டி வருகிறார்கள்.‘ என்றார்.


Next Story