புனேயில் வினோதம் செருப்பை காணவில்லை என போலீசில் புகார்


புனேயில் வினோதம் செருப்பை காணவில்லை என போலீசில் புகார்
x
தினத்தந்தி 11 Oct 2017 8:00 AM GMT (Updated: 11 Oct 2017 8:00 AM GMT)

செருப்பை காணவில்லை என ஒருவர் போலீசில் புகார் செய்திருப்பது புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புனே,

புனே மாவட்டம் கேட் தாலுகா ரக்சேவாடி பகுதியை சேர்ந்தவர் விஷால். இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது தளத்தில் குடும்பத்தினருடன் வசிக்கிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு அவர் வீட்டின் வெளியே கழற்றி போட்டிருந்த புதிய ஜோடி செருப்பு மாயமானது.

அதன் விலை ரூ.425. இதனால், அதிர்ச்சி அடைந்த விஷால், அதோடு விடவில்லை. உடனடியாக வெறும் காலில் போலீஸ் நிலையம் நோக்கி நடைப்போட்டார். அங்கு சென்று மாயமான தன்னுடைய செருப்பை கண்டுபிடித்து தருமாறு கூறி புகார் மனு கொடுத்தார்.

விசித்திரமான இந்த புகாரால் போலீசார் குழம்பி போய் நின்றார்கள். ஆனாலும், விஷால் விடுவதாக இல்லை. ஒருவழியாக அவரிடம் இருந்து புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், திருட்டு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் செருப்பை திருடிச்சென்ற மர்ம ஆசாமியின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

செருப்பை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story