‘டாஸ்மாக்’ கடைகள் மூடி இருக்கும் நேரங்களில் வீட்டில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து விற்பனை


‘டாஸ்மாக்’ கடைகள் மூடி இருக்கும் நேரங்களில் வீட்டில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து விற்பனை
x
தினத்தந்தி 21 Oct 2017 11:15 PM GMT (Updated: 21 Oct 2017 7:38 PM GMT)

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கைதான தம்பதியர் ‘டாஸ்மாக்’ கடைகள் மூடி இருக்கும் நேரங்களில் வீட்டில் மதுபாட்டில்களை அடுக்கி வைத்து விற்பனை செய்துள்ளனர்.

சென்னை,

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள அம்மா நகர் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட தம்பதியர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். குவார்ட்டர் அளவு கொண்ட 289 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட தம்பதியர் பெயர் தம்பிராஜ்(வயது 40), அம்மு(35) என்று தகவல் வெளியானது.
ஆனால் அந்த தம்பதியர் உண்மையான பெயர் போஸ்(32), அமலா(29) என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அந்த தம்பதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பரபரப்பு தகவல்கள்

தம்பிராஜூம், அம்முவும் ‘டாஸ்மாக்’ கடைகள் மதியம் 12 மணிக்கு திறக்கும் வரையிலும், இரவு 10 மணிக்கு மேல் விடிய, விடிய மது விற்பனை செய்து வந்துள்ளனர். வீடா? அல்லது ‘டாஸ்மாக்’ மது கடையா? என்று எண்ணும் அளவுக்கு மதுபிரியர்கள் விருப்பத்துக்கு ஏற்ப மது ரகங்களை வீட்டில் வரிசைப்படுத்தி அடுக்கி வைத்துள்ளனர்.

‘டாஸ்மாக்’ விலையை விட ஒரு குவார்ட்டருக்கு 25 ரூபாய் கூடுதல் விலையில் விற்றுள்ளனர். 200 மதுபாட்டில்கள் விற்பனை செய்து அதன் மூலம் தினமும் ரூ.5 ஆயிரம் லாபம் பார்த்து வந்துள்ளனர்.

சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் மட்டுமின்றி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்பட சுற்றி உள்ள பகுதியை சேர்ந்த மதுபிரியர்களும் இரவு நேரத்தில் மது வாங்குவதற்காக அம்மா நகர் பகுதிக்கு படையெடுத்து வந்துள்ளனர்.

Next Story