விளையாட்டை ரசிக்கட்டும்.. வித்தியாசமாக ருசிக்கட்டும்..


விளையாட்டை ரசிக்கட்டும்.. வித்தியாசமாக ருசிக்கட்டும்..
x
தினத்தந்தி 12 Nov 2017 9:01 AM GMT (Updated: 12 Nov 2017 9:01 AM GMT)

குழந்தைகளை சாப்பிட வைப்பது பெரிய கலை. அந்த கலை பெரும்பாலானவர் களுக்கு தெரியாததால், குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைத்துவிட வேண்டும் என்று மணிக்கணக்கில் அவர்கள் பின்னால் சுற்றுகிறார்கள்.

குழந்தைகளை சாப்பிட வைப்பது பெரிய கலை. அந்த கலை பெரும்பாலானவர் களுக்கு தெரியாததால், குழந்தைகளை எப்படியாவது சாப்பிட வைத்துவிட வேண்டும் என்று மணிக்கணக்கில் அவர்கள் பின்னால் சுற்றுகிறார்கள். அப்படி சுற்றுகின்ற தாய்மார்கள் சற்று சிந்தித்து செயல்பட்டால்போதும், குழந்தைகளை சாப்பிடவைத்துவிடலாம்.

குழந்தைகளை கூடுமானவரை சுயமாக எடுத்து சாப்பிட பழக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். குழந்தைகள், பெரியவர்களை பார்த்துக்கொண்டே இருக்கும். அவர்கள் செய்வது போன்ற அனைத்து செயல்களையும் தானும் செய்யவேண்டும் என்று முயற்சிக்கும். அவர்கள் சுயமாக சாப்பிடுவதை பார்த்துவிட்டு, தானும் அதுபோல் சாப்பிடவே விரும்பும். ஆனால் பெரும்பாலான பெற்றோர் அதை அனுமதிப்பதில்லை. காரணம் குழந்தைகள் உணவை சுற்றிலும் இறைத்து விரயமாக்கும் என்பதுதான்.

எல்லா முதல் முயற்சிகளிலும், எல்லோருக்கும் சிறிதளவில் ஏதாவது விரயம் ஏற்படத்தான் செய்யும். குழந்தைகளின் சாப்பாட்டு பயிற்சியில் ஓரளவு விரயத்தை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். முதன் முதலில் தனியே சாப்பிட முயற்சிக்கும்போது குழந்தைகளால் சாப்பிடுவதில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். சாப்பாட்டிலும், தட்டிலும் கவனத்தை செலுத்தமுடியாது. குழந்தை ஓரளவு சுயமாக சாப்பிட கற்றுக்கொண்ட பின்பு, ‘கீழே சிதறாமல் நான் சாப்பிடுவதுபோல் நீயும் சாப்பிடவேண்டும்’ என்று கூறி, விரயம் ஏற்படுவதை தவிர்க்க முன்வரவேண்டும். கீழே சிந்தாமல் குழந்தையை சாப்பிடத் தூண்டுவதும், கீழே சிந்திவிட்டால் குற்றம்சாட்டுவதும் கூடாது. ஏன்என்றால் உணவு கீழே சிந்தும்போதுதான், சிந்தாமல் சாப்பிடவேண்டும் என்ற உணர்வு குழந்தைக்கு ஏற்படும். குழந்தை உணவை கீழே சிந்திக்கொண்டு, அதை பார்த்தபடி சாப்பிடுவது அதன் மனோவளர்ச்சியை பலப்படுத்தும் விஷயம்.

குழந்தை நல மருத்துவர்கள், ‘குழந்தைகளை தானாகவே எடுத்து சாப்பிட பழக்கவேண்டும். அது அவர்கள் விருப்பத்தை தூண்டி அறிவை வளர்க்கும். தன்னுடைய தேவை எது என்பதை பற்றி அவர்களை யோசிக்க வைக்கும். ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சியை சோதிக்க அதனை சாப்பிடவைத்து பார்ப்பது ஒருவித வழிமுறையாகும். தானே எடுத்து சாப்பிடும் குழந்தைகளின் மனோவளர்ச்சி சீராக இருப்பதாக அர்த்தம்’ என்று கூறுகிறார்கள்.



குழந்தைகளின் வளர்ச்சி அவர்கள் பிறந்த நாளில் இருந்து மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது. உட்காருவது, தவழ்வது, நடப்பது போல், குறிப்பிட்ட மாதங்களுக்குள் குழந்தைகள் சுயமாக சாப்பிடவும் ஆரம்பித்துவிடவேண்டும். இது அவர்களது வளர்ச்சியோடு இணைந்த விஷயம். சுயமாக சாப்பிடத் தொடங்கிவிட்டால் மூளையின் இயக்கம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.

குழந்தைகளை சாப்பிட வைக்க பல எளிய வழிகள் உள்ளது. குழந்தையோடு நாமும் அமர்ந்து சாப்பிட வேண்டும். வித்தியாசமான உணவு வகைகளை அவர்கள் எதிரில்வைத்து சாப்பிடும்போது தானும் அப்படி சாப்பிட வேண்டும் என்று குழந்தைகள் விரும்பும். அப்போது தயங்காமல் அவர்களை நமக்கு இணையாக உட்காரவைத்து தட்டில் பரிமாறும்போது அவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். அந்த கவுரவத்தை ஏற்றுக்கொண்டு நம்மைப் போலவே சாப்பிட முயற்சி செய்வார்கள். சில தவறுகள் நடந்தாலும் நாளடைவில் தானே சாப்பிட பழகிக் கொள்வார்கள்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் கொஞ்சம் இனிப்பு கலந்திருக்க வேண்டும். சாப்பிட மென்மையாக இருக்கவேண்டும். பல வண்ணங்களில் இருக்கவேண்டும். எடுத்து சாப்பிட வசதியாக சிறிதாகவும் இருக்கவேண்டும். குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை சாப்பிடவைப்பது பெரும்பாடுதான். அவைகள் எவ்வளவு நேரமானாலும் சாப்பிடாமல் விளையாடிக் கொண்டிருக்கும். உடல் சோர்ந்துபோவதுகூட தெரியாது.

சுயமாக சாப்பிட விரும்பாத குழந்தைகளை எப்படி சாப்பிடவைப்பது என்று சிந்தியுங்கள். பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு அழைத்துச் சென்று மற்ற குழந்தைகளுடன் நன்றாக விளையாட விடுங்கள். போகும்போது கையில் ஏதாவது சாப்பிட தயாரித்து எடுத்துச் செல்லுங்கள். மற்ற குழந்தைகளோடு சேர்ந்து சாப்பிட குழந்தைகள் விரும்புவார்கள். அப்போது அவர்களை சாப்பிடச் செய்யுங்கள். தானே எடுத்து சாப்பிட பழக்கினால் பள்ளிக்குப் போகும் போதும் அந்த பழக்கம் கைகொடுக்கும். விளையாட்டோடு விளையாட்டாக அவர்களை சாப்பிட வைக்கமுயற்சிக்க வேண்டும். உணவகங்களுக்கு அழைத்துச் செல்லலாம். அங்கு அனைவரும் உட்கார்ந்து விதவிதமாக சாப்பிடுவதை பார்க்கும்போது குழந்தைகளுக்கும் சாப்பாட்டு ஆர்வம் அதிகரிக்கும்.

சாப்பிடுவதை அவர்கள் சந்தோஷமாக செய்யவேண்டும். அடித்து மிரட்டி சாப்பிட வைக்கக் கூடாது. அப்படி செய்தால் சாப்பாட்டின் மீதே அவர் களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும். அந்த வெறுப்பு அவர்களை சாப்பாட்டை விட்டு வெகு தூரம் துரத்தி விடும்.

தொடர்ந்து குழந்தை சாப்பிட அடம்பிடித்தால், அதை அப்படியே விட்டுவிடக்கூடாது. ஒருவேளை வயிற்றில் ஏதாவது உபாதை இருக்கலாம். ஏதேனும் பயம் இருக்கலாம். உணவு வகை பிடிக்காமல் இருக்கலாம். என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கலாம். காரணத்தை தெரிந்து கொள்ளாமல் அவர்களை வற்புறுத்தக்கூடாது. தங்களுக்குப் பிடித்த சுவையை குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாது. ஒவ்வொரு பொருளாக கொடுத்து நாம்தான் அவைகளின் சுவையின் விருப்பத்தை அறிய வேண்டும். இது பெரிய சவால்தான். ஆனால் வெளி மைதான விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகள் சாப்பாட்டிலும் ஆர்வமாகவே இருக்கும். ஆகவே குழந்தைகளை விளையாடத்தூண்டுங்கள்.


Next Story