சுகாதார சீர்கேட்டினால் அவதி: பாழடைந்த அரசு கட்டிடத்தை இடித்து விட்டு நூலகம் கட்டித் தர வேண்டும்


சுகாதார சீர்கேட்டினால் அவதி: பாழடைந்த அரசு கட்டிடத்தை இடித்து விட்டு நூலகம் கட்டித் தர வேண்டும்
x
தினத்தந்தி 12 Nov 2017 10:45 PM GMT (Updated: 12 Nov 2017 7:07 PM GMT)

பாழடைந்த அரசு கட்டிடத்தை இடித்து விட்டு நூலக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாரியங்காவல்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் தங்கும் நல விடுதி இயங்கி வந்தது. இந்த விடுதியானது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, எதிரேயுள்ள ஜெயங்கொண்டம் அரசு ஆண்கள் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

இந்நிலையில் அந்த பழைய ஓட்டு கட்டிடம் தற்போது பயன்பாடின்றி பாழடைந்து கிடக்கின்றது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் இந்த ஓட்டு கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளது. மேலும் இந்த கட்டிடத்தின் உட்புறம் மற்றும் சுற்றுப்புறத்திலும் சுகாதாரமின்றி குப்பைகள் சூழ்ந்து உள்ளதால் அந்த இடம் கொசு உற்பத்தி மையமாக உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

மேலும் அதனை ஒட்டியே அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையங்கள், நெடுஞ்சாலை துறை அலுவலகம், டிராவல்ஸ் பங்களா (பயணியர் மாளிகை) உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. பல்வேறு அலுவல்கள் காரணமாக இந்த அலுவலகங்களுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து செல்லும் பொதுமக்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் இந்த குப்பைகளினால் ஏற்படும் துர்நாற்றத்தினால் மூக்கை பிடித்து கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. இங்கு மதுபானக் கடையும் உள்ளது. அதனை சுற்றியுள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் போதை வஸ்துக்களான மதுபானம், பான்பராக், குட்கா போன்றவற்றை அங்கு பயன்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி பல முறை போலீசிடமும், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடமும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் புகார் அளித்துள்ளனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அதனை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள் கருவேல முட்களை வெட்டி போட்டு அடைத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி அவர்கள் வேலியை தாண்டி உள்ளே சென்று விடுவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த பாழடைந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு அவ்விடத்தை சுத்தப்படுத்தி, தூய்மை காப்பதுடன் சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைத்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நூலகக்கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஜெயங்கொண்டத்தில் பல ஆண்டுகளாக ஜெயங்கொண்டம் கிளைநூலகத்திற்கென தனிக்கட்டிடம் கிடையாது. இது நாள் வரை வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story