காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு


காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட இளம்பெண் மீட்பு
x
தினத்தந்தி 13 Dec 2017 11:15 PM GMT (Updated: 13 Dec 2017 9:06 PM GMT)

காதல் திருமணம் செய்ததால் கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டார். தந்தை உள்பட 10 பேரையும் போலீசார் வேனில் அழைத்து சென்றனர்.

கரூர்,

திருச்சி அருகே உள்ள பெட்டவாய்த்தலையை சேர்ந்தவர் செல்வம். அ.தி.மு.க. பிரமுகர். இவரது மகள் சுவேதா (வயது22). புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் மனிதநேயம் (24). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் சுவேதாவை கடத்தி சென்றதாக பெட்டவாய்த்தலை போலீஸ் நிலையத்தில் சுவேதாவின் பெற்றோர் புகார் அளித்தனர். மேலும் மதுரை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் சுவேதா நேற்று முன்தினம் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி தான் கணவருடன் செல்ல விரும்புவதாக நீதிபதியிடம் கூறினார்.

இதையடுத்து சுவேதா தனது கணவர் மனிதநேயத்துடன் மதுரையில் இருந்து பஸ்சில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டார். அப்போது மேலூர் அருகே பஸ்சை வழிமறித்து சுவேதாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் கார் மற்றும் ஆம்னி வேனில் கடத்தி சென்றனர்.கடத்தப்பட்ட சுவேதாவை நேற்று முன்தினம் இரவு கரூரில் போலீசார் மீட்டனர். அவரை கடத்தி வந்த தந்தை செல்வம் உள்பட 10 பேரை பிடித்தனர். மேலும் கார் மற்றும் ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட சுவேதாவையும், பிடிபட்டவர்களையும் போலீசார் வெள்ளியணை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அங்கு வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட இளம்பெண்ணை பலத்த பாதுகாப்புடன் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணி அளவில் மேலூர் அழைத்து சென்று ஒப்படைத்தனர். இதேபோல அவரது தந்தை செல்வம் உள்பட 10 பேரையும் வேனில் போலீசார் மேலூர் அழைத்து சென்றனர். கார் மற்றும் ஆம்னி வேனையும் மேலூருக்கு கொண்டு சென்றனர். சுவேதாவை கடத்தியதாக மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருப்பதால் விசாரணையை அங்குள்ள போலீசார் தொடருவார்கள் என கரூர் போலீசார் தெரிவித்தனர்.


Next Story