வேப்பூர் அருகே தனித்தனி சம்பவம்: நீரில் மூழ்கி 2 பேர் பலி


வேப்பூர் அருகே தனித்தனி சம்பவம்: நீரில் மூழ்கி 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 Dec 2017 9:00 PM GMT (Updated: 30 Dec 2017 8:30 PM GMT)

வேப்பூர் அருகே தனித்தனி சம்பவத்தில் நீரில் மூழ்கி 2 பேர் பலியானார்கள்.

வேப்பூர்,

வேப்பூர் அருகே உள்ள ஏ.சித்தூரை சேர்ந்தவர் முருகன் (வயது 55). தொழிலாளி. இவர் அந்த ஊரில் உள்ள தாமரைகுளத்தில் நேற்று குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் திடீரென நீரில் மூழ்கினார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வேப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குளத்தில் மூழ்கிய முருகனை பிணமாக மீட்டனர்.

இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் குளத்தில் மூழ்கி பலியான முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் வேப்பூர் அருகே மே.மாத்தூர் பகுதியில் அணைக்கட்டு நீரில் மூழ்கி மற்றொரு தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அதன் விவரம் வருமாறு:–

தூத்துக்குடியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சேர்மன் (34). தொழிலாளி. இவர் வேப்பூர் அருகே மே.மாத்தூரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று மே.மாத்தூர் அணைக்கட்டிற்கு சென்று, கரையோரமாக குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சேர்மனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story