பெண் எலி மருந்தை தின்று சாவு: கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் முற்றுகை


பெண் எலி மருந்தை தின்று சாவு: கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 Dec 2017 10:15 PM GMT (Updated: 31 Dec 2017 10:25 PM GMT)

காதல் திருமணம் செய்த பெண் எலி மருந்தை தின்று உயிரிழந்தார். அந்த பெண் சாவுக்கு காரணமான அவருடைய கணவர் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி கோட்டாட்சியரை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூரை சேர்ந்தவர் கலியுக கண்ணன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள தொப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சாந்திபிரியாவை (வயது 27) காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் சாந்திபிரியா எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார்.

இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல்லில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சாந்தி பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் திரண்டனர். இது தொடர்பாக வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கேட்டு கொடுமை

இந்நிலையில், சாந்தி பிரியாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து விசாரணை நடத்த ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் பொன் ராமர் நேற்று மாலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவரது காரையும், அவரையும் முற்றுகையிட்டு சாந்திபிரியாவின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் கோட்டாட்சியரிடம், சாந்திபிரியாவை அவரது கணவர் கலியுக கண்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததால், மனமுடைந்த அவர் விஷம் குடித்தார். ஆனால் இதுவரை கலியுக கண்ணனையும், அவரது குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்யவில்லை. உடனடியாக அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் பொன்ராமர் கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இன்று (திங்கட்கிழமை) சாந்தி பிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது உறவினர் களிடம் ஒப்படைக்கப் படவுள்ளது. 

Next Story