தொழிலாளி விபத்தில் பலி நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரும்பிய போது சோகம்


தொழிலாளி விபத்தில் பலி நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு திரும்பிய போது சோகம்
x
தினத்தந்தி 1 Jan 2018 10:15 PM GMT (Updated: 1 Jan 2018 9:30 PM GMT)

தாரமங்கலம் அருகே நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடி விட்டு திரும்பிய போது, தொழிலாளி விபத்தில் பலியானார்.

தாரமங்கலம்,

தாரமங்கலம் அருகே உள்ள சேவகனூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் ராகுல் (வயது 19), கூலித்தொழிலாளி.

இவர், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சரவணன், பிரகாஷ் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் தாரமங்கலத்துக்கு வந்து புத்தாண்டை கொண்டாடினார்.

பின்னர் நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ராகுல் ஓட்டிச்சென்றார். நண்பர்கள் இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர்.

சாவு

கருக்கல்வாடி அருகே சென்ற போது, சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்து ராகுல் படுகாயம் அடைந்தார். அதேநேரத்தில் நண்பர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இதனிடையே படுகாயம் அடைந்த ராகுல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்து குறித்து தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். புத்தாண்டில் தனது மகன் இறந்ததை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.


Next Story