அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெறுவேன் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி


அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெறுவேன் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 1 Jan 2018 11:00 PM GMT (Updated: 1 Jan 2018 9:31 PM GMT)

என் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெறுவேன் என்று, மன்னார்குடி அருகே குலதெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்த டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தட்டான்கோவில் கிராமத்தில் வீரமணவாளசாமி கோவில் உள்ளது. இக்கோவில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வின் குலதெய்வ கோவிலாகும். சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற பிறகு தினகரன் நேற்று தனது மனைவி அனுராதா, மகள் ஜெயஹரிசினி ஆகியோருடன் தட்டான்கோவிலுக்கு வந்து குல தெய்வம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலில் காத்தாயிஅம்மன், பிள்ளையார், முருகன் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபட்ட பின்னர் குலதெய்வமான வெள்ளையம்மாள், பொம்மியம்யாளுடன் அருள்பாலித்து வரும் வீரமணவாளசாமியை தரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட அவர், அதே பகுதியில் மருதூர் கிராமத்தில் உள்ள சிவபிரகாசசுவாமிகள் ஜீவ சமாதிக்கு சென்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அங்கு கூடியிருந்த பெண்கள், தினகரனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெற்றி பெறுவேன்

ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். அதற்காகத்தான் ஆர்.கே. நகர் மக்கள் எனக்கு வெற்றியை அளித்தனர். தேர்தலுக்கு பிறகு தினகரன் காணாமல் போய்விடுவார் என பலரும் கூறினர். அவர்களின் கனவு பொய்யாகிவிட்டது. சட்டசபையில் நான் என்ன பேசப் போகிறேன் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். நாளை (புதன்கிழமை) ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க திட்டமிட்டுள்ளேன். என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளின் காரணமாக 3 மாதங்களுக்கு பிறகு அரசியலில் தினகரன் நீடிப்பாரா? என சிலர் பேசி வருகிறார்கள். என் மீது தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் மூலமாக சந்தித்து வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்த கேள்விக்கு, டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பதில்அளிக்க மறுத்து விட்டார். முன்னதாக மன்னார்குடிக்கு வந்த தினகரனுக்கு அவருடைய ஆதரவு அணி மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

Next Story