தூக்க மாத்திரைகளை தின்று கால்சென்டர் பெண் ஊழியர் தற்கொலை


தூக்க மாத்திரைகளை தின்று கால்சென்டர் பெண் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Jan 2018 10:25 PM GMT (Updated: 1 Jan 2018 10:25 PM GMT)

திருமணத்துக்கு மறுப்பு தூக்க மாத்திரைகளை தின்று கால்சென்டர் பெண் ஊழியர் தற்கொலை காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு.

பெங்களூரு,

பெங்களூரு கோரமங்களாவில் உள்ள எல்.ஆர்.நகரில் வசித்து வந்தவர் அஞ்சலி (வயது 22). கால்சென்டர் ஊழியர். இவருடன் ரோஸ் கார்டனில் வசித்து வரும் சஞ்சய் என்பவரும் வேலை பார்த்து வந்தார். அவர்கள் 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சஞ்சய், அஞ்சலியுடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அஞ்சலியை திருமணம் செய்துகொள்ள சஞ்சய் மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அஞ்சலி சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சஞ்சயை சந்தித்து அஞ்சலியை திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சியுள்ளனர். அப்போதும் சஞ்சய் மறுத்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த அஞ்சலி தனது வீட்டில் வைத்து அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய குடும்பத்தினர் அவரை மீட்டு பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த நிலையில் சஞ்சய் மீது அஞ்சலியின் குடும்பத்தினர் ஆடுகோடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஞ்சயை வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story