செங்குன்றம் அருகே தினகரன் ஆதரவாளருக்கு அரிவாள் வெட்டு


செங்குன்றம் அருகே தினகரன் ஆதரவாளருக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 12 Jan 2018 11:45 PM GMT (Updated: 12 Jan 2018 8:28 PM GMT)

செங்குன்றம் அருகே தினகரன் ஆதரவாளரை அரிவாளால் வெட்டிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். பதற்றம் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

செங்குன்றம்,

செங்குன்றம் அடுத்த மருதுபாண்டி நகர் 8–வது தெருவைச் சேர்ந்தவர் ரவி என்ற வைகோ ரவி (வயது 49). இவர், டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் ஆவார்.

ரவி, ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் சொந்தமாக லாரி வைத்தும் தொழில் செய்து வருகிறார். செங்குன்றத்தை அடுத்த ஆலமரம் பகுதியில் இவருடைய அலுவலகம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு ரவி, அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே வந்தார். அப்போது ஒரு மர்மஆசாமி, அவரிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் ரவியை வெட்டினார். இதில் அவரது இடது கையில் வெட்டு விழுந்தது.

அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்ததால், பயந்துபோன மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பலத்த காயம் அடைந்த ரவி, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர், சப்–இன்ஸ்பெக்டர் கென்னடி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரவிக்கும், அதே பகுதியை சேர்ந்த தினகரனின் மற்றொரு ஆதரவாளரான முத்துராமலிங்கம் என்பவருக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவரும் அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார், 2 பேரையும் அழைத்து சமரசம் செய்து வைத்ததாக தெரிகிறது.

இந்த தகராறில் ரவியை வெட்டிக்கொலை செய்ய முயற்சி நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபரை தேடி வருகின்றனர். மேலும் பதற்றம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story