வீட்டிற்குள் தாய் தூங்கிக்கொண்டிருக்கும் போது தீ வைத்த கறிக்கடைக்காரர் கைது


வீட்டிற்குள் தாய் தூங்கிக்கொண்டிருக்கும் போது தீ வைத்த கறிக்கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2018 10:30 PM GMT (Updated: 15 Jan 2018 8:22 PM GMT)

மடத்துக்குளத்தில் வீட்டிற்குள் தாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது தீ வைத்த கறிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 32). கறிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய தாய் சரோஜா (60). இவர் ஞானசேகரன் குடியிருக்கும் வீட்டின் மாடியில் குடிசை அமைத்து வசித்து வருகிறார்.

இவருக்கும், இவருடைய மகன் ஞானசேகரனுக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தாய்க்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் சரோஜா தனது குடிசை வீட்டை பூட்டிக்கொண்டு வீட்டிற்குள் தூங்கினார்.

இந்த நிலையில் அவருடைய குடிசை வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனால் சரோஜா அலறினார். இவருடைய அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் ஓடிவந்து, சரோஜாவை காப்பாற்றினார்கள். இதற்கிடையில் தீ பக்கத்து வீட்டிற்கும் பரவியது. இதனால் பக்கத்து வீட்டில் உள்ள பொருட்கள் எரிந்துசாம்பலானது. உடனே பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அவர்களது வீட்டின் சமையல் அறையில் உள்ள கியாஸ் கிலிண்டரை பாதுகாப்பாக வெளியே தூக்கி வந்தனர். இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து மடத்துக்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைத்தனர். அதற்குள் சரோஜாவின் குடிசை வீடும், பக்கத்து வீடும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரோஜாவிடமும், அவருடைய மகன் ஞானசேகரனிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில் தாயின் குடிசை வீட்டிற்கு ஞானசேகரன் தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர். தாய் வீட்டினுள் படுத்து இருக்கும்போதே அவருடைய வீட்டிற்கு மகன் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story