கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது, 5 பேர் உயிர் தப்பினர்


கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது, 5 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 15 Jan 2018 10:30 PM GMT (Updated: 15 Jan 2018 9:06 PM GMT)

கல்லட்டி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 பேர் உயிர் தப்பினார்கள்.

மசினகுடி,

ஐதராபாத்தை சேர்ந்தவர் மாசிரெட்டி (வயது 50). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனது நண்பரின் காரை வாங்கி கொண்டு, தனது குடும்பத்தினர் 4 பேருடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். கடந்த 13-ந்தேதி மசினகுடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அவர், நேற்று முன்தினம் மதியம் கல்லட்டி மலைப்பாதை வழியாக காரில் ஊட்டிக்கு குடும்பத் தினருடன் சென்றார்.

9-வது கொண்டை ஊசி வளைவில் சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை கண்ட மாசிரெட்டி காரை சாலையோரத்தில் நிறுத்தினார். பின்னர் அவரும், அவரது குடும்பத்தினரும் காரில் இருந்து கீழே இறங்கினார்கள்.

தொடர்ந்து மாசிரெட்டி காரின் முன்பகுதியை திறந்து பார்க்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் திறக்க முடியவில்லை. அதற்குள் காரில் முன்பகுதியில் தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. சில நொடிகளில் கார் முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து ஊட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில் அந்த கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. காரில் வந்த மாசிரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 5 பேர் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினார்கள்.

இது குறித்து புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கார் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித் தனர். 

Next Story