முட்புதரில் பெண்சிசு பிணம் மீட்பு வீசிச்சென்ற தாய் எங்கே? போலீசார் விசாரணை


முட்புதரில் பெண்சிசு பிணம் மீட்பு வீசிச்சென்ற தாய் எங்கே? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Jan 2018 10:45 PM GMT (Updated: 15 Jan 2018 9:16 PM GMT)

இளம்பிள்ளை அருகே முட்புதரில் பெண் சிசு பிணம் மீட்கப்பட்டது. வீசிச்சென்ற தாய் எங்கே? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆட்டையாம்பட்டி,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி அருகே கல்பாரப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ஏரியின் முட்புதரில் பெண் சிசு பிணம் கிடந்தது.

கல்பாரப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணி இரவில் பெற்றெடுத்த பெண் சிசுவை அந்த பகுதியில் உள்ள ஏரி முட்புதரில் வீசி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த பெண் சிசுவின் கால் பகுதியை நாய் கடித்து இருந்தது. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் பிருந்தாவுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து கல்பாரப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் சம்பவ இடத்துக்கு சென்று பெண் சிசு பிணத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் சிசுவை இரக்கமின்றி முட்புதரில் வீசிச்சென்ற தாய் எங்கே? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story