காரில் கடத்தப்பட்ட 200 லிட்டர் சாராயம் பறிமுதல் வாலிபர் கைது


காரில் கடத்தப்பட்ட 200 லிட்டர் சாராயம் பறிமுதல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Jan 2018 10:45 PM GMT (Updated: 15 Jan 2018 9:17 PM GMT)

பேரளம் அருகே காரில் கடத்தப்பட்ட 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள சில்லுக்குடி பகுதியில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிளும், அதை பின்தொடர்ந்து ஒரு காரும் வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த மோட்டார்சைக்கிளை வழிமறித்தபோது காரில் வந்தவர்கள் காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மோட்டார்சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தண்டத்தோப்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீராம்பிரபு (வயது35) என்பதும், புதுச்சேரியில் இருந்து சாராயத்தை காரில் கடத்தி செல்வதற்கு மோட்டார்சைக்கிளில் சென்று வழிகாட்டியதும் தெரியவந்தது.

பறிமுதல்

இதையடுத்து போலீசார் காரை சோதனையிட்டனர். இதில் காரில் 10 சாக்கு மூட்டைகளில் இருந்த 200 லிட்டர் சாராய பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராம்பிரபுவை கைது செய்தனர். சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்து தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story