வீட்டை விட்டு ஓடியதால் தாய் உயிரை மாய்த்தார் தனியார் பள்ளி ஆசிரியை, காதலனுடன் தற்கொலை


வீட்டை விட்டு ஓடியதால் தாய் உயிரை மாய்த்தார் தனியார் பள்ளி ஆசிரியை, காதலனுடன் தற்கொலை
x
தினத்தந்தி 15 Jan 2018 10:03 PM GMT (Updated: 15 Jan 2018 10:03 PM GMT)

ராமநகர் அருகே வீட்டை விட்டு ஓடியதால் தாய் உயிரை மாய்த்து கொண்டார். இதனால் காதலனுடன், தனியார் பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு,

துமகூரு மாவட்டம் ஹூலியூர் துர்கா அருகே வசித்து வந்தவர் சாந்தம்மா. இவரது மகள் திவ்யா (வயது 23). இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் வேணு என்ற வேணுகோபால் (26). ஹூலியூர் துர்கா பஞ்சாயத்தில் ஊழியராக பணியாற்றினார். வேணுவும், திவ்யாவும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் திவ்யாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் வேணுவுடனான காதலை கைவிடும்படி திவ்யாவிடம் கூறியுள்ளனர். இதற்கு அவர் மறுத்து விட்டார். மேலும் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது பற்றி வேணுவிடம் திவ்யா கூறினார். இதையடுத்து, 2 பேரும் வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். அதன்படி கடந்த 13-ந் தேதி வேணுவும், திவ்யாவும் வீட்டை விட்டு ஓடிப்போய் விட்டனர்.

தற்கொலை

பின்னர் ராமநகர் மாவட்டம் ககலிபுராவில் வசிக்கும் நண்பரான சசிதரின் வீட்டிற்கு திவ்யாவை வேணு அழைத்து சென்றார். அன்றைய தினம் இரவு அவர்கள் அங்கேயே தங்கி இருந்தார்கள். இதற்கிடையில் வேணுவுடன் திவ்யா ஓடிப்போனது பற்றி அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. மகள் காதலனுடன் ஓடிப்போனதால் மனம் உடைந்த சாந்தம்மா கடந்த 13-ந் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி நேற்று முன்தினம் காலையில் திவ்யாவிடம் சசிதர் தெரிவித்தார். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். பின்னர் வேணு, திவ்யாவை சமாதானப்படுத்தி துமகூருவுக்கு அனுப்ப சசிதர் முடிவு செய்தார்.

பின்னர் அவர் வெளியே புறப்பட்டு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வேணுவும், திவ்யாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அறிந்ததும் ககலிபுரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காதல் ஜோடியின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தனது தாய் தற்கொலை செய்து கொண்டதால் மனம் உடைந்த திவ்யா காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ககலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story