நெல்லை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


நெல்லை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2018 9:00 PM GMT (Updated: 17 Jan 2018 7:28 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பாவூர்சத்திரம்

நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். 101-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவுக்கு, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் எம்.பி. தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் காமராஜர் பூங்கா, சென்டரல் வங்கி, வடக்கு பஸ்நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த கொடி கம்பங்களில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதே போல் இலங்காபுரிபட்டணம், ஆலங்குளம் பேரூர் தொகுதி, மாறாந்தை பஸ்நிலையம், முக்கூடல், பாப்பாக்குடி, ஆழ்வார்குறிச்சி, கடையம் ஆகிய பகுதிகளிலும் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் கீழப்பாவூர் கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.பால்துரை, பாசறை மாவட்ட செயலாளர் சேர்மபாண்டி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தென்காசி-செங்கோட்டை


தென்காசி அருகே உள்ள புல்லுக்காட்டு வலசை, ஆசாத் நகர், வாய்க்கால்பாலம், கீழப்புலியூர், சொர்ணபுரம் தெரு, வேன் ஸ்டாண்ட், கூலக்கடை பஜார், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் எம்.ஜி.ஆர் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. இந்த இடங்களில் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர் தூவி, அ.தி.மு.க கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மேலும் தென்காசி அருகே உள்ள மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், இலஞ்சி ஆகிய பகுதிகளிலும் அ.தி.மு.க கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம், ஜெயலலிதா பேரவை செயலாளர் முருகன் ராஜ், மேலகரம் செயலாளர் கார்த்திக்குமார், தலைமை கழக பேச்சாளர் நெல்லை முகிலன், இலஞ்சி செயலாளர் மயில்வேலன் உள்பட பலர் கலந்து கொண்டானர்.

தினகரன் அணி


தென்காசி பூக்கடை பஜாரில் டி.டி.வி தினகரன் அணி சார்பில் நகர செயலாளர் முத்துக்குமார் தலைமையில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த விழாவுக்கு, நகர செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் கட்சி கொடியேற்றப்பட்டது.

சங்கரன்கோவில்-அம்பை

சங்கரன்கோவில் நகர அதிமுக சார்பில் நடந்த விழாவுக்கு, நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க இயக்குநர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார். விழாவை முன்னிட்டு பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சங்கரன்கோவில் தினகரன் அணி சார்பில் நடந்த விழாவுக்கு நகர செயலாளர் சங்கரசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர அவை தலைவர் செல்வசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை சார்பில் திருவேங்கடம் சாலை பாடாபிள்ளையார் கோவில் அருகே அமைக் கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர அவைத்தலைவர் பட்டு சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அம்பாசமுத்திரம் நகர அ.தி.மு.க. சார்பில் பூக்கடை பஜாரில் அலங்கரித்து வைக் கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு, முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ. மலர் தூவி மரியாதை செலுத்தினார். கூட்டுறவு இணையதள தலைவர் சக்திவேல் முருகன், நகர செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அம்பை வனத்துறை அலுவலகம் அருகில், ஆசிரியர் காலனி, கோவில்குளம் பகுதிகளில் கட்சி கொடியேற்றப்பட்டது.

ஆவரைகுளம் -பரப்பாடி

ஆவரைகுளத்தில் நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பால்துரை தலைமையில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பரப்பாடி எம்.ஜி.ஆர் பாசறை சார்பில் நடந்த விழாவில், எம்.ஜி.ஆர். படத்துக்கு, பாசறை செயலாளர் குமாரவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பரப்பாடியில் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாமதேவன், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

ராதாபுரம்

ராதாபுரம் அருகே சவுந்திரபாண்டிபுரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாலரிச்சர்ட், அ.தி.மு.க. கிளை கழக செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பணகுடி

பணகுடியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு பணகுடி பஸ் நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். படத்துக்கு இன்பத்துரை, எம்.எல்.ஏ. வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம், நகர செயலாளர் ஜெயனுல் ஆப்தின் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story