பழனியில் பேக்கரி உள்பட 4 கடைகளில் பணம், செல்போன்கள் திருட்டு, போலீஸ் விசாரணை


பழனியில் பேக்கரி உள்பட 4 கடைகளில் பணம், செல்போன்கள் திருட்டு, போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 17 Jan 2018 10:00 PM GMT (Updated: 17 Jan 2018 8:05 PM GMT)

பழனியில் பேக்கரி உள்பட 4 கடைகளில் பணம், செல்போன்கள் திருடு போனது. கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி ரெயில்வே பீடர் ரோட்டில் ஜவுளிக்கடை, பேக்கரி உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். நேற்று காலையில் வழக்கம் போல் கடைகளை திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் வந்தனர்.

அப்போது அங்குள்ள பேக்கரி உள்பட 7 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் கடைக்குள் சென்று பொருட்களை சரிபார்த்தனர். இதில் 3 கடைகளில் பணம், பொருள் எதுவும் திருடு போகவில்லை.

ஆனால் ஜவுளிக்கடை, மருந்தகம், பேக்கரியில் இருந்து ரூ.3 லட்சம் திருடு போனதாகவும், அதன் அருகே இருந்த செல்போன் கடையில் இருந்து 3 செல்போன்கள் திருடு போனதும் தெரியவந்தது. இதுகுறித்து பழனி நகர் போலீசில் கடைக்காரர்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் பேக்கரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு நபர் கடைக்குள் வந்து பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து பணத்தை எடுத்துச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைத்தொடர்ந்து திண்டுக்கல்லில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

அது கடைகளில் இருந்து மோப்பம்பிடித்தபடி சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடைகளில் பதிவான தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story