சேரன்மாதேவியில் வாலிபர் வெட்டிக்கொலை: கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்


சேரன்மாதேவியில் வாலிபர் வெட்டிக்கொலை: கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 18 Jan 2018 9:30 PM GMT (Updated: 18 Jan 2018 6:51 PM GMT)

சேரன்மாதேவியில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேரன்மாதேவி,

சேரன்மாதேவியில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாலிபர் கொலை

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி வடக்கு நான்காம் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவருடைய 3-வது மகன் தங்க பாண்டி(வயது 22) கார் டிரைவர். நேற்று முன்தினம் இரவு சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் தங்க பாண்டியை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சேரன்மாதேவி கோட்டைவிளை தெருவைச் சேர்ந்த செல்லையா, கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். அந்த கொலையில் தங்க பாண்டிக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்லையாவின் உறவினர்கள் தங்க பாண்டியை கொலை செய்து இருக்கலாம் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் போலீசார் சேரன்மாதேவியைச் சேர்ந்த ஆறுமுகம்(25), சங்கர் என்ற சதீஷ்(23), கோட்டைவிளை தெருவைச் சேர்ந்த நம்பிராஜன்(19), கொம்பையா(25) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உறவினர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் தங்க பாண்டியை கொன்ற கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் நேற்று காலையில் சேரன்மாதேவி பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக பஸ் நிலையத்திற்கு வந்த பஸ்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று 2-வது நாளாக அடைக்கப்பட்டு இருந்தன.

தகவல் அறிந்த சேரன்மாதேவி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வாகனங்கள் உடைப்பு

இதற்கிடையே நேற்று காலையில் நெல்லையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சை, தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகில் ஒரு கும்பல் மறித்து கல்வீசி தாக்கியது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மேலும் கோட்டைவிளை தெருவுக்கு சென்ற மர்ம கும்பல், அங்கு நின்ற ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், ஏற்கனவே கொலை செய்யப்பட்ட செல்லையாவின் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியது.

பக்கத்து வீடுகளில் உள்ள ஜன்னல், டி.வி. மற்றும் மின்விளக்குகளையும் அடித்து நொறுக்கியது. இந்த சம்பவம் குறித்து சேரன்மாதேவி போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பதற்றம் நிலவுவதாலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோர்ட்டில் ஒருவர் சரண்


இதற்கிடையே இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சேரன்மாதேவி ஒப்பிலாபுரம் தெருவை சேர்ந்த வேலு மகன் குமார்(34), நேற்று நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ் முன்னிலையில் சரண் அடைந்தார்.

அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து குமாரை, போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story