திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் மோதல்; 4 பேர் காயம் 16 பேர் மீது வழக்குப்பதிவு


திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் மோதல்; 4 பேர் காயம் 16 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 18 Jan 2018 8:30 PM GMT (Updated: 18 Jan 2018 7:04 PM GMT)

திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 16 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்தனர்.

இருதரப்பினர் மோதல்

திருச்செந்தூர் அருகே உள்ள நடு நாலுமூலைகிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் ஸ்டாலின் (வயது 27). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அங்குள்ள பலவேசகார கோவில் அருகில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி வின்சென்ட் (56) மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர், ஸ்டாலினிடம் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்துமாறு கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினருக்கு இடையே மோதலாக மாறியது.

இதில் காயம் அடைந்த ஸ்டாலின், அவருடைய தம்பி இளஞ்செழியன் ஆகிய 2 பேரும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றனர். அப்போது அங்கு வைத்தும் அவர்களை வின்சென்ட் உள்ளிட்டவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

16 பேர் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து ஸ்டாலின் அளித்த புகாரின்பேரில், வின்சென்ட், அவருடைய மகன் வேல்முருகன் (28), பேச்சிமுத்து மகன் கவியரசன், கனகராஜ் மகன் கலைச்செல்வன், சுடலைமணி மகன்கள் மற்றொரு ஸ்டாலின், பிரசாந்த், வீரமணி மகன் தமிழழகன், பெருமாள் மகன் சிவபெருமாள் (27) ஆகிய 8 பேர் மீது திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வேல்முருகன், சிவபெருமாள் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் தங்களை தாக்கியதாக வின்சென்ட், மற்றொரு ஸ்டாலின் ஆகிய 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து வின்சென்ட் அளித்த புகாரின்பேரில், ஸ்டாலின், அவருடைய தம்பி இளஞ்செழியன், ரங்கசாமி மகன் சேகர், ஆனந்தன் மகன் அரவிந்த், பொன்ராஜ் மகன் சிவபாலன், கார்த்திக கனி மகன் சிற்றரசன், தியாகசீலன் மகன் அமர், வின்சென்ட் மகன் தெய்வசிங் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story