காசோலை மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு ரூ.26 கோடி இழப்பீடு உல்லாஸ்நகர் கோர்ட்டு தீர்ப்பு


காசோலை மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு ரூ.26 கோடி இழப்பீடு உல்லாஸ்நகர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Jan 2018 10:15 PM GMT (Updated: 18 Jan 2018 10:12 PM GMT)

காசோலை மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவன பங்குதாரர்கள் ரூ.26 கோடி இழப்பீடு வழங்க உல்லாஸ்நகர் கோர்ட்டு உத்தரவிட்டது.

தானே,

காசோலை மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவன பங்குதாரர்கள் ரூ.26 கோடி இழப்பீடு வழங்க உல்லாஸ்நகர் கோர்ட்டு உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட் அதிபர்

தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் கோபி மாதவ்தாஸ். ரியல் எஸ்டேட் அதிபரான இவர், மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவன பங்குதாரர்கள் 7 பேருடன் கடந்த 2006-ம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டார். அதன்படி, உல்லாஸ்நகரில் ரூ.85 கோடி மதிப்பில் 60 ஏக்கர் நிலத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் உரிமையை கோபி மாதவ்தாஸ் பெற்றார்.

ஒப்பந்தப்படி, முதற்கட்ட மாக ரூ.8½ கோடி செலுத் தினார். இதைத்தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்த அந்நிறுவனம், அவரிடம் பெற்ற ரூ.8½ கோடியை லாபம், இழப்பீடு மற்றும் நிலத்தின் மதிப்பை கருத்தில் கொண்டு திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டது. அதன்படி, ரூ.16½ கோடி மதிப்பில், இரண்டு காசோலைகளை கோபி மாதவ்தாசிடம் வழங்கியது.

ஓராண்டு ஜெயில்

காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதுபற்றி ரியல் எஸ்டேட் நிறுவன பங்குதாரர்களிடம் முறையிட்ட போது, முறையான பதில் இல்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், உல்லாஸ்நகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு ஆர்.டி.சவுகளே தீர்ப்பு கூறினார்.

அதன்படி, ரியல் எஸ்டேட் நிறுவன பங்குதாரர்கள் 7 பேரும் மனுதாரருக்கு தலா ரூ.3 கோடியே 73 லட்சத்து 21 ஆயிரத்து 500 வீதம், மொத்தம் ரூ.26 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரத்து 500 இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

மேலும், 6 பேருக்கு தலா ஓராண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். ஒருவர் தண்டனையில் இருந்து தப்பினார்.

Next Story