குப்பை லாரி டயரில் சிக்கி பலியான துப்புரவு தொழிலாளியின் உடலை சாலையோரம் வீசிய 4 பேர் கைது


குப்பை லாரி டயரில் சிக்கி பலியான துப்புரவு தொழிலாளியின் உடலை சாலையோரம் வீசிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2018 10:45 PM GMT (Updated: 18 Jan 2018 10:37 PM GMT)

காலாசவுக்கியில் குப்பை லாரி டயரில் சிக்கி பலியான துப்புரவு தொழிலாளியின் உடலை சாலையோரம் வீசிச்சென்ற சக தொழிலாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

காலாசவுக்கியில் குப்பை லாரி டயரில் சிக்கி பலியான துப்புரவு தொழிலாளியின் உடலை சாலையோரம் வீசிச்சென்ற சக தொழிலாளர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிணமாக மீட்பு

மும்பை காலாசவுக்கி பகுதியில் சாலையோரம் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் காயங்கள் இருந்தன. எனவே போலீசார் வழக்குப்பதிவு, செய்து விசாரணை நடத்தினர். போலீசார் பிணமாக மீட்கப்பட்டவரின் சட்டை பையில் இருந்து செல்போன் ஒன்றை கைப்பற்றினர் அதில், அவர் கடைசியாக மாநகராட்சி குப்பை லாரி ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது பிணமாக மீட்கப்பட்டவர் மாநகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலாளியான முகமது மன்சூரி என்பது தெரியவந்தது. மேலும் இவர் சம்பவத்தன்று சக தொழிலாளிகளான ரன்வீர், பிரஜேஸ், பினேமால் மற்றும் முங்கரிலால் ஆகியோருடன் சேர்ந்து குப்பை லாரியில் குப்பை சேகரிக்க சென்றது தெரியவந்தது.

உடலை வீசிச்சென்றனர்

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. அதாவது, சம்பவத்தன்று முகமது மன்சூரி 4 பேருடன் குப்பை சேகரிக்க லாரியில் சென்றுள்ளார். காலாசவுக்கி பகுதியில் லாரி நின்றபோது, முகமது மன்சூரி லாரியில் இருந்து இறங்கி கீழே நின்று உள்ளார். இதை கவனிக்காத டிரைவர் லாரியை பின்னோக்கி எடுத்துள்ளார். இதில் முகமது மன்சூர் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் பயந்துபோன மற்ற 4 பேரும் முகமது மன்சூரின் உடலை சாலையோரம் வீசிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆதாரங்களை அழிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story