பாலிவுட்டில் நுழைந்த இந்தியாவின் கலாசார போர்


பாலிவுட்டில் நுழைந்த இந்தியாவின் கலாசார போர்
x
தினத்தந்தி 19 Jan 2018 7:00 AM GMT (Updated: 19 Jan 2018 6:28 AM GMT)

‘பத்மாவதி’ என்ற இந்தி படம், சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. 1301-ம் ஆண்டு, தங்கள் ராஜ்யத்தை பிடித்த டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் உயிருடன் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக, ராணி பத்மாவதி, தன்னைப் போன்ற ராஜபுத்திர சமூகத்து பெண்கள் 16 ஆயிரம் பேருடன் தீக்குளித்து மாண்ட கதையை சொல்கிறது, இந்த படம்.

வெளியாவதற்கு முன்பே, இந்த படம் பத்திரிகைகளின் முதல்பக்க செய்திகளிலும், டி.வி. சேனல் விவாதங்களிலும் இடம்பிடித்துள்ளது. படத்தை வெளியிட்டால், வன்முறை வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தேசத்தின் ஆளும் கட்சியான பா.ஜனதா ஆளும் 4 மாநிலங்களில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.

பத்மாவதி கதையின் வரலாற்று துல்லியம் சந்தேகத்துக்கிடமாகவே உள்ளது. பத்மாவதியின் ஊரான சித்தூர் மீதான அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பு பற்றிய சமகால வரலாற்று குறிப்புகள் எதுவும், ராணி பத்மாவதியை பற்றி குறிப்பிடவில்லை. இருப்பினும், 1540-ம் ஆண்டு, சூபி கவிஞர் மாலிக் முகமது ஜெயசி, பத்மாவதி கதையை பற்றி கவிதை நூல் எழுதியதில் இருந்து மதிப்புக்குரியவராக திகழ்ந்து வருகிறார், பத்மாவதி.

ஆனால், ஜெயசி தனது கதை இலக்கியரீதியாக எடுத்துக்கொள்ளப்படுவதை விரும்பவில்லை என்று தோன்றுகிறது. கடவுள் பற்றிய மனிதனின் தேடலை உருவகப்படுத்த காதலை பயன்படுத்தும் பாரசீக கவிதை நடையையே அவரது படைப்பு பிரதிபலித்தது. அதனால், அவரது பாடல்கள், வெளிப்புற சக்திகளால் தாக்கப்பட்ட மனமும், ஆன்மாவும் இணைந்த கலவையின் உருவகமாக இருக்கிறது. சித்தூர் மீதான அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பையே தனது பாடுபொருளாக கொண்டார், ஜெயசி. ஏனென்றால், சித்தூரில் இடம்பெற்ற ‘சிட்’ என்ற வார்த்தைக்கு ‘உணர்வு’ என்று பொருள்.

ஆனால், இலக்கியமானது, வெளியானவுடன் தனக்கென ஒரு வாழ்க்கையை பெற்று விடுகிறது. ஜெயசியின் கதை, எண்ணற்ற முறை வங்க கவிஞர்களாலும், ராஜஸ்தானி நாட்டுப்புற பாடகர்களாலும் மறுபடியும், மறுபடியும் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலேய கர்னல் டோட், பத்மாவதியின் கதையை தனது ‘அன்னல்ஸ் அண்ட் ஆன்டிக்யுட்டிஸ் ஆப் ராஜபுதனா’ என்ற தொகுப்பில் சேர்த்துள்ளார். அதில், பத்மாவதியின் தீக்குளிப்பு அவரை மாசற்ற இந்து பெண்களுக்கு உதாரணகர்த்தாவாக ஆக்கியது என்று குறிப்பிட்டுள்ளார்.

காலமாற்றத்தில், பத்மாவதி, வழிபாட்டுக்கு உரியவராக மாற்றப்பட்டார். அவர் தீக்குளித்து மாண்ட இடம், சுற்றுலா தலமானது. கர்னி சேனா என்ற ராஜபுத்திர அமைப்பின் தலைவர், தன்னை பத்மாவதியின் நேரடி வாரிசாக கூறிக் கொள்கிறார். (பத்மாவதி வரலாறு ஒரு கட்டுக்கதை என்று கூறினால், “நான் பத்மாவதி நேரடி சந்ததி வரிசையில் 37-வது ஆள். நான் என்ன பேயா?” என்று கேட்கிறார்).

இப்படி, பெண்களின் மாண்புக்கும், கற்புக்கும் அடையாளமாக பத்மாவதி உருவகப்படுத்தப்பட்ட நிலையில், அவரைப்பற்றி படம் எடுக்க முன்வந்த பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தாக்குதலுக்கு இலக்கானார். ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்கர் கோட்டையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அரங்கத்தை கர்னி சேனா அடித்து நொறுக்கியது. ராணி பத்மாவதிக்கும், முஸ்லிம் மன்னர் அலாவுதீன் கில்ஜிக்கும் இடையே காதல் இருப்பதுபோல், சஞ்சய் லீலா பன்சாலி காட்சி எடுப்பதாக குற்றம் சாட்டி, கோலாப்பூரில் படப்பிடிப்புக்கு இடையூறு விளைவித்தது. இது திரித்துக் கூறப்படும் கதை என்று கூறி, படம் வெளியிடப்படுவதற்கு ராஜபுத்திர சமூகமும் முட்டுக்கட்டை போட்டதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு தடை விதித்த 4 பா.ஜனதா முதல்-மந்திரிகள் உள்பட படத்துக்கு எதிரானவர்கள் யாரும் இதை கண்டிப்பதற்கு முன்பு படத்தை பார்க்கவில்லை. இந்தியாவில் சில இந்துக்கள், தாங்கள் நம்பும் வரலாற்று நிகழ்வுக்கு ஆதரவாக எப்படி போராடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

தீவிர மதச்சார்பற்றவாதியான முதலாவது பிரதமர் ஜவகர்லால் நேரு 70 ஆண்டுகளுக்கு முன்பே இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். “உண்மையும், கற்பனையும் பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப்பிணைந்துள்ளன. இந்த கலவை, கற்பனை வரலாறாக மாறிவிடுகிறது. நடந்தது என்ன என்பதை அது துல்லியமாக சொல்லாமல் இருக்கக்கூடும். ஆனால், மக்கள் நம்பும் எது நடந்தது? தங்களது சரித்திர முன்னோர்களின் திறமை பற்றி அவர்கள் நினைப்பது என்ன? என்ன கொள்கை அவர்களை ஈர்த்தது? போன்ற முக்கியமான விஷயங்களை அது சொல்கிறது” என்று நேரு கூறினார். ஆகவே, உண்மையும், கற்பனையும் கலந்த அல்லது சில நேரங்களில் கற்பனை மட்டுமே கொண்ட, ‘கற்பனை வரலாறு’ அடையாள உண்மையாகி விடுகிறது.

இது, ‘பத்மாவதி’ படத்துக்கான எதிர்ப்பை சுருக்கமாக விளக்குகிறது. சில இந்துக்களுக்கு வரலாற்று உண்மைக்கும், கலாசார நம்பிக்கைக்கும் இடையிலான வேறுபாடு ஒரு பிரச்சினையே அல்ல. நம்பிக்கையை போலவே, சரிபார்ப்பதும் முக்கியம்தான். இன்றைய சூழ்நிலையில், ஒரு சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவது, ஒரு குற்றச்செயல். இந்த பார்வை தேவையானதுதான்.

பழங்கால இந்துக்கள் ஊக்குவித்த சகிப்புத்தன்மையும், கருத்து வேறுபாட்டை ஏற்றுக்கொள்ளும் குணமும் இக்கால மக்களிடம் அரிதாகவே காணப்படுகின்றன.

ஆனால், இதற்கு முன்னுதாரணம் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, மற்றொரு படத்துக்கு எழுந்த எதிர்ப்பை பன்சாலி மனதில் கொண்டிருக்க வேண்டும். அந்த சமயத்தில், முடி திருத்தும் கலைஞர்கள், ‘பில்லு பார்பர்’ என்ற படத்துக்கு ஆட்சேபனை தெரிவித்தனர். பார்பர் என்ற வார்த்தை, தங்கள் தொழிலை இழிவுபடுத்துவதாக அவர்கள் கூறினர்.

எனவே, அப்படம் திரையிடப்பட்ட இடங்களில் எல்லாம் போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டினர். அதனால், பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளரும் படத்தின் இரண்டாவது வார்த்தையை நீக்கிவிட்டு, ‘பில்லு’ என்று பெயர் சூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அப்படித்தான் ‘பத்மாவதி’யும், ‘பத்மாவத்’தாக மாறிவிட்டது.

இத்தகைய சக்திகள், ஒரு பாலிவுட் படத்தை பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெரிய பிரச்சினையாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த எதிர்ப்புகள், குறுகிய மனப்பான்மையை பிரதிபலிக்கின்றன. இந்தியாவில், கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து வந்திருப்பதாக கூறும் அதே வேளையில், இத்தகைய அச்சுறுத்தும் கும்பலிடம் அரசாங்கம் சரண் அடைவது நன்றாக தெரிகிறது.

இந்த சகிப்புத்தன்மையற்ற கும்பல், தங்களது சட்டவிரோத அச்சுறுத்தலை செய்ய அனுமதிப்பதன் மூலம், இந்தியா ஒரு நாகரிக நாடு என்ற நற்பெயரை சீர்குலைக்க அவர்களை அனுமதித்து வருகிறோம்.

பன்முகத்தன்மை கொண்ட ஜனநாயக இந்தியா, பல்வேறு சமூகத்தினரின் மாறுபட்ட கருத்துகளை சகித்துக்கொள்ள வேண்டும். தங்களைத் தாங்களே கலாசார நீதிபதிகளாக நியமித்துக்கொண்ட இவர்கள், தங்களது போலித்தனத்தையும், இரட்டை நிலைப்பாட்டையும் நம் மீது திணிக்க அனுமதிப்பது, இந்தியாவுக்கு ஆபத்தாக முடியும்.

(கட்டுரையாளர்: சசிதரூர் - ஐ.நா. முன்னாள் துணை பொதுச்செயலாளர், முன்னாள் மத்திய மந்திரி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்)

Next Story