ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் மீது மண்எண்ணெய் ஊற்றி கொலை மிரட்டல், 3 பேர் கைது


ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் மீது மண்எண்ணெய் ஊற்றி கொலை மிரட்டல், 3 பேர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2018 11:15 PM GMT (Updated: 2 Feb 2018 7:14 PM GMT)

கூடலூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகள் மீது மண்எண்ணெய் ஊற்றி கொலை மிரட்டல் விடுத்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்,

கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மெயின்ரோட்டில் தனியார் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளனர். அவர்களிடம் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை ஊராட்சி அலுவலகம் சார்பில் கூறியதாக தெரிகிறது. ஆனால் ஆக்கிரமிப்பை அவர்கள் அகற்றவில்லை.

இந்நிலையில், நேற்று கம்பம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜ், சேதுகுமார் ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக பொக்லைன் எந்திரத்துடன் குள்ளப்பகவுண்டன்பட்டிக்கு வந்தனர். அங்கு மெயின்ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்ற தொடங்கினர்.

அப்போது ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் கண்ணன் (வயது 42), அவருடைய மனைவி செல்வி (41), அவருடைய அண்ணன் சுந்தரபாண்டி (45) மற்றும் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த செல்வி வீட்டுக்குள் சென்று அங்கு கேனில் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து அலுவலர்கள் ரங்கராஜ், சேதுகுமார் ஆகியோர் மீது ஊற்றியுள்ளார். மேலும் அவர்கள் எரித்து கொலை செய்து விடுவதாக அதிகாரிகளை மிரட்டியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை பாதியிலேயே நிறுத்திவிட்டு, அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன், செல்வி மற்றும் சுந்தரபாண்டி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story