கர்நாடக சட்டசபை 5-ந் தேதி கூடுகிறது இருசபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார் 16-ந் தேதி பட்ஜெட் தாக்கல்


கர்நாடக சட்டசபை 5-ந் தேதி கூடுகிறது இருசபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார் 16-ந் தேதி பட்ஜெட் தாக்கல்
x
தினத்தந்தி 2 Feb 2018 10:00 PM GMT (Updated: 2 Feb 2018 8:50 PM GMT)

கர்நாடக சட்டசபை வருகிற 5-ந் தேதி கூடுகிறது. இருசபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை வருகிற 5-ந் தேதி கூடுகிறது. இருசபைகளின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார். 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட், வருகிற 16-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

கர்நாடக மேல்-சபை தலைவர் சங்கரமூர்த்தி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சட்டசபை கூட்டு கூட்டம்

கர்நாடக சட்ட சபையின் கூட்டு கூட்டம் வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டம் 9-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். இது நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முதல் நாள் காலை 11 மணிக்கு நடைபெறும் சட்டசபையின் கூட்டு கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றுகிறார். கவர்னர் உரை முடிந்த பிறகு மேல்-சபை தனது கூட்ட அரங்கத்தில் கூடும்.

அதில் மரணம் அடைந்த முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும். அதைத்தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். கடைசி நாளில் முதல்-மந்திரி விவாதத்திற்கு நன்றி தெரிவிப்பார். மீண்டும் 16-ந் தேதி சட்டசபை தொடங்கும். அன்றைய தினம் கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 28-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும்.

மசோதாக்கள் நிறைவேற்றப்படும்

இந்த கூட்டுக் கூட்டத் தொடரில் பல்வேறு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படும். உறுப்பினர்களிடம் இருந்து இதுவரை 252 கேள்விகள் வந்துள்ளன. இதில் 45 கேள்விகளுக்கு சபையில் பதிலளிக்கப்படும். மீதமுள்ள 252 கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதில் அளிக்கப்படும். பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க விதி எண் 72-ன் கீழ் 34 தீர்மானங்களும், 330-ன் 14 கீழ் தீர்மானங்களும் வந்துள்ளன.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் நடத்த வேண்டும் என்று சட்டசபை மற்றும் மேல்-சபையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு மட்டுமே 60 நாட்கள் கூட்டத்தொடர் நடந்துள்ளது. மற்ற ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இது எனக்கு வருத்தம் அளிப்பதாக உள்ளது.

100 மசோதாக்கள்

கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இதில் 16 மசோதாக்கள் மீது மட்டுமே முழுமையான அளவில் விவாதம் நடைபெற்றது. சுமார் 100 மசோதாக்கள் சரியான முறையில் விவாதம் நடைபெறாமல் நிறைவேற்றப்பட்டன. மசோதாக்கள் மீது முழு அளவில் விவாதம் நடைபெற வேண்டும் என்பது எனது விருப்பம்.

முதல் முறையாக உறுப்பினர்கள் ஆன்லைன் மூலமாக கேள்விகளை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளோம். இதன் மூலம் இதுவரை 25 கேள்விகள் எங்களுக்கு வந்துள்ளன. மேல்-சபையில் காகித பயன்பாட்டை முழுமையாக ரத்து செய்யும் பணியை தொடங்கியுள்ளோம். இதற்கான செலவை வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

உறுப்பினர்களுக்கு பயிற்சி

சபையில் உறுப்பினர்களுக்கு கணினி வசதி ஏற்படுத்தப்படும். அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். நாட்டில் தற்போது இமாசல பிரதேசத்தில் மட்டுமே இந்த காகித பயன்பாடு இல்லாத முறை அமலில் உள்ளது. மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த வசதி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு சங்கரமூர்த்தி கூறினார்.

Next Story