தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு


தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
x

தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த டிசம்பர் மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக 2 ஆயிரத்து 400 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

பூண்டி ஏரிக்கு சராசரியாக வினாடிக்கு 300 முதல் 350 கனஅடி தண்ணீர் மட்டும்தான் வந்து சேர்ந்தது. ஆந்திராவில் உள்ள விவசாயிகள் மின் மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சிவிடுவதால் இந்த நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடும்படி கோரிக்கை விடுக்க தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் திருப்பதி சென்றனர்.

பேச்சுவார்த்தை

இவர்கள் ஆந்திர அரசின் தெலுங்கு கங்கை திட்ட தலைமை பொறியாளர் முரளிநாதரெட்டியை சந்தித்து பேச்சு வார்தை நடத்தினர். ஆந்திர விவசாயிகளின் தண்ணீர் திருட்டு, சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கண்டலேறு அணையில் 68 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போது 13.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஆகையால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறக்க தமிழக அதிகாரிகள் குழு கோரிக்கை வைத்தது. இரவு வரை நீடித்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் கண்டலேறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீீர் திறந்துவிட முரளிநாதரெட்டி ஒப்புக்கொண்டார். அதாவது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க ஒப்புக்கொண்டார்.

கூடுதல் தண்ணீர்

தமிழக அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று காலை முதல் கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதாவது 50 கன அடி தண்ணீர் அதிகரித்து 2 ஆயிரத்து 450 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரிக்கு 407 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கடந்த மாதம் 2-ந்தேதி முதல் நேற்று முன்தினம் இரவு வரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 751 மில்லியன் கனஅடி தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பூண்டி ஏரிக்கு 4 டி.எம்.சி. தண்ணீீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும். இந்த ஆண்டு அது சாத்தியமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி 4 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க பெற்றால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story