சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லை: இறந்தவர்களின் உடல்களை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம்


சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லை: இறந்தவர்களின் உடல்களை வயல் வழியாக தூக்கி செல்லும் அவலம்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:01 AM GMT (Updated: 8 Feb 2018 3:01 AM GMT)

பாபநாசம் அருகே சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை வயல் வழியாக பொதுமக்கள் தூக்கி செல்கிறார்கள்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி ஊராட்சிக்கு உட்பட்ட உப்புக்கார தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள மக்கள் இறந்தால் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று சுடுகாட்டில் தகனம் செய்வது வழக்கம். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ரெயில்வே துறையினர் ரெயில்வே பாதை முழுவதையும் இரும்புக்கம்பியால் அடைத்து விட்டனர். இதனால் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சாமிஅய்யா(வயது90) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். இவருடைய உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லாததால் மக்கள் அருகே உள்ள நெற்பயிர்கள் விளைந்த வயல் வழியாக உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்று தகனம் செய்தனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ராஜகிரி ஊராட்சிக்கு உட்பட்ட உப்புக்கார தெரு மக்கள் மயானத்துக்கு செல்ல நிரந்தர சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story