பாஸ்போர்ட் விசாரணையை விரைந்து முடிக்க நவீன கருவி நாகை மாவட்ட போலீசாருக்கு வழங்கினார்


பாஸ்போர்ட் விசாரணையை விரைந்து முடிக்க நவீன கருவி நாகை மாவட்ட போலீசாருக்கு வழங்கினார்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:02 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

பாஸ்போர்ட் விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் பிரத்யேக நவீன கருவிகளை நாகை மாவட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி. லோகநாதன் வழங்கினார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆவணங்கள் இன்றி பாஸ்போர்ட் விசாரணையை இணையதளம் வழியாக புதிய செயலி மூலம் விரைவாக முடிக்க புதிய நவீன கருவிகள் (டேப்லெட்-பிசி) போலீசாருக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமை தாங்கி, போலீசாருக்கு பிரத்யேக நவீன கருவிகளை வழங்கினார். முதற்கட்டமாக நாகை மாவட்டத்தில் உள்ள 28 போலீஸ் நிலையங் களுக்கு இந்த நவீன கருவி வழங்கப்பட்டது.

பின்னர் டி.ஐ.ஜி. லோக நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாஸ்போர்ட் விசாரணையை புதிய நவீன கருவி மூலம் நேரடியாக விசாரணை செய்யும் முறையை தமிழக முதல்-அமைச்சர் கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கி வைத்தார். பாஸ்போர்ட் விசாரணையில் இருக்கும் காலதாமதத்தை குறைக்கும் வகையில் இணையதளம் மூலமாக எம்-பாஸ்போர்ட் என்ற காவல்துறை செயலி மூலம் பாஸ்போர்ட் விசாரணை செய்து முடிக்கும் வகையில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் பிரத்யேகமாக நவீன கருவி (டேப்லெட் பிசி) வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தும் விதம் குறித்து நாகை மாவட்டத்தில் மூன்று பிரிவுகளாக இதுவரை 86 போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு பாஸ்போர்ட் விசாரணைக்கு ஆவணங்கள் மூலம் சரிபார்க்கப்பட்ட அனைத்து விபரங்களும், இந்த நவீன கருவி மூலம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து விண்ணப்பதாரரின் வீட்டிற்கு சென்று விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள், புகைப்படம் மற்றும் கையொப்பம் போன்றவற்றை சரிபார்த்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர்தேஷ்முக், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story