இறுதிக்கட்டத்தில் தஞ்சை-திருச்சி இரட்டை ரெயில்பாதை பணிகள் நாளை ரெயில் என்ஜினை இயக்க திட்டம்


இறுதிக்கட்டத்தில் தஞ்சை-திருச்சி இரட்டை ரெயில்பாதை பணிகள் நாளை ரெயில் என்ஜினை இயக்க திட்டம்
x
தினத்தந்தி 8 Feb 2018 3:02 AM GMT (Updated: 8 Feb 2018 3:02 AM GMT)

தஞ்சை-திருச்சி இடையேயான இரட்டை ரெயில்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பாதையில் தஞ்சை-சோளகம்பட்டி இடையே நாளை (வெள்ளிக்கிழமை) ரெயில் என்ஜினை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் தஞ்சையும் ஒன்று. இந்த தஞ்சை வழியாகத்தான் முன்பு அதிக அளவில் தென்மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. நாளடைவில் விழுப்புரம்-திருச்சி இடையேயான ரெயில்பாதை தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அந்த வழியாக ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் சுற்றுலா தலங்களான வேளாங்கண்ணி, நாகூர், கோவில் நகரமான கும்பகோணத்திற்கும் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். தற்போது தஞ்சை வழியாக 30-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும், 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை-திருச்சி இடையே ஒருவழிப்பாதை என்பதால் ஒரு ரெயில் வந்தால் எதிர்திசையில் வரும் மற்ற ரெயில் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. சில நேரங்களில் ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

எனவே தஞ்சை-திருச்சி இடையே இருவழிப்பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என பொதுமக்கள், ரெயில் பயணிகள் உபயோகிப்பாளர் சங்கத்தினர் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து மத்திய அரசு தஞ்சை-திருச்சி இடையேயான ஒழிவழிப்பாதை திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது.

கடந்த 2011-12-ம் ஆண்டு பட்ஜெட்டில் தஞ்சை-திருச்சி இடையே பொன்மலை வரை 49 கிலோ மீட்டர் தூர ரெயில்பாதையை இருவழிப்பாதையாக மாற்ற முதல்கட்டமாக ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்துக்கு ரூ.450 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

இதையடுத்து இந்த ரெயில் பாதைக்காக சில இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டது.தஞ்சை-திருச்சி இடையே இடதுபுறமாக ஏற்கனவே மீட்டர்கேஜ் ரெயில்பாதை இருந்த தடத்தில் இந்த பாதை அமைக்கப்பட்டு வந்தது. இதற்காக மீட்டர்கேஜ் பாதையில் இருந்த தண்டவாளங்கள்-ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டு புதிய பாதை அமைக்க நிலத்தை சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த புதிய வழித்தடத்தில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய பாலங்கள், 3 இடங்களில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இதற்காக தஞ்சை-திருச்சி வழித்தடத்தில் உள்ள பூதலூர், சோளகம்பட்டி, திருச்சி திருவெறும்பூர், பொன்மலை ஆகிய ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி பொன்மலையில் இருந்து பணிகள் தொடங்கி நடைபெற்றது. தற்போது இந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதாவது தஞ்சை மேம்பாலம் அருகே இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரட்டை ரெயில்பாதையை ஏற்கனவே உள்ள வழித்தடத்துடன் இணைக்க வேண்டிய பணிகள் மட்டுமே மீதி உள்ளன. மற்ற பணிகள் நிறைவடைந்துள்ளன. இணைப்பு பணிக்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சையில் ஆய்வு மேற்கொண்ட தென்னக ரெயில்வே பொதுமேலாளர் குல்ஷேத்ரா, இந்த மாதத்துக்குள் (பிப்ரவரி) இரட்டை ரெயில்பாதை பணிகள் முடிவடையும் என தெரிவித்தார். அதன்படி தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த இரட்டை ரெயில் வழித்தடத்தில் திருச்சியில் இருந்து தஞ்சை அருகே உள்ள சோளகம்பட்டி ரெயில் நிலையம் வரை தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சோளகம்பட்டியில் இருந்து தஞ்சை இடையே தான் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளதால் தஞ்சையில் இருந்து சோளகம்பட்டி வரை ரெயில் என்ஜினை மட்டும் இயக்கி அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர்.

இந்த வழித்தடத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) ரெயில் என்ஜின் இயக்கப்படுகிறது. ரெயில் என்ஜின் இயக்கப்பட்ட பின்னர் ஏதாவது பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டி இருந்தால் அதனை செய்து ரெயில்வே பாதுகாப்புத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர், இந்த வழித்தடத்தில் ஆய்வு மேற்கொள்ளார் என ரெயில்வேத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

Next Story