பெண்ணுக்கு கள்ளக்காதலில் பிறந்த குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை போலீசார் விசாரணை


பெண்ணுக்கு கள்ளக்காதலில் பிறந்த குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Feb 2018 3:10 AM GMT (Updated: 8 Feb 2018 3:10 AM GMT)

நெல்லை அருகே பெண்ணுக்கு கள்ளக்காதல் மூலம் பிறந்த குழந்தை ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரத்தை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும், கோவையை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி ஒருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த ஓட்டல் தொழிலாளி இறந்து விட்டார். இதனால் அந்த பெண் தனது குழந்தைகளுடன் சொந்த ஊரான கொண்டாநகரத்துக்கு வந்தார். இங்கு அவர் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறார்.

அவர் கட்டிட காண்டிராக்டர் ஒருவரிடம் வேலைக்கு சென்று வந்தார். அந்த கட்டிட காண்டிராக்டருக்கு ஆண் வாரிசு கிடையாது. இந்த நிலையில் அவருக்கும், அந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் அந்த பெண் கர்ப்பமாகி, சமீபத்தில் அவருக்கு கல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

ஆஸ்பத்திரியில் குழந்தையின் பெயரை பதிவு செய்தபோது தந்தை பெயருக்கு கட்டிட காண்டிராக்டரின் பெயரை தெரிவித்து பதிவு செய்து உள்ளார். இதுபற்றி அந்த காண்டிராக்டருக்கு தெரியவந்து உள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அந்த பெண்ணிடம், குழந்தையின் தந்தை பெயருக்கு எனது பெயரை ஏன் கொடுத்தாய்? என்று கூறி சண்டையிட்டு, அந்த குழந்தையை யாரிடமாவது கொடுத்து விடு என்று கூறினார்.

இதையடுத்து அந்த பெண், ஒரு புரோக்கர் உதவியுடன் அந்த குழந்தையை நெல்லையை சேர்ந்த ஒருவரிடம் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்தார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அதன்பேரில் போலீசார், கள்ளக்காதலில் பிறந்த ஆண் குழந்தை யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story